ஏழை குடும்ப தலைவர் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு... இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். எல்.ஐ.சி மற்றும் யுனைடட் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களில் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதேபோல் தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.