'வளர்ந்து வரும் நட்சத்திரம்' அமெரிக்க விருதை பெறுகிறார் தமிழிசை
பாஜக தலைவர் தமிழிசைக்கு வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது வழங்கப்பட உள்ளது.
சென்னை: 'வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதுக்கு அமெரிக்காவில் தரப்போகிறார்களாம்? யாருக்கு தெரியுமா? நம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்குதான்.
காங்கிரசிஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தராஜன். தந்தை அந்த காலத்திலிருந்து தற்போது வரை காங்கிரசில் தீவிரமாக பங்காற்றி வந்தாலும், மகள் தமிழிசையே மாற்று அரசியல் களங்களில் ஈடுபட்டு வருபவர்கள்.
பெருமைக்குரிய விஷயம்
இருவரும் முற்றிலும் வேறுபட்ட இருவேறு பாதைகள்.. இரு வேறு கருத்து வேறுபாடுகள்.. இரு வேறு தார்மீக உரிமைகள் என்ற பாதையில் பயணித்து வருகிறார்கள். 15 வருடங்களாக பாஜகவில் உறுப்பினராக இருந்த தமிழிசை 2014-ம் ஆண்டு அக்கட்சியின் மாநில தலைவரானார். பாஜகவில் ஒரு பெண் தலைவராக இருப்பது தமிழகத்தில் தமிழிசைதான் என்பது பெருமைக்குரிய விஷயம்.
உறுதி பிடிப்பு
இவருக்கு இருக்கும் பாரம்பரிய பின்னணி, பொதுமக்களிடம் பிரசித்தி பெற்ற நபர் என்ற அடையாளம், மருத்துவர் என்ற உயரிய பொறுப்பு, மாற்று கட்சிக்காரரை கண்ணியத்துடன் விமர்சித்து நடத்தும் போக்கு, அனைத்தும் மேலாக எப்படியாவது தமிழகத்தில் பாஜகவை கொண்டு வந்துவிடுவது என்ற உறுதிப்பிடிப்பு இவை எல்லாமே தமிழிசைக்கு கொண்டு வந்து சேர்ந்த நற்பண்புகள் ஆகும்.
வளர்ந்து வரும் நட்சத்திரம்
எனவேதான் அமெரிக்க நாட்டின் பிரபல அமைப்பு பன்னாட்டு கலாசார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் இந்த ஆண்டிற்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை தேர்வு செய்துள்ளது. அரசியல், மருத்துவம், சமூக சேவை என்று சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய பெண் தலைவர் என்ற பிரிவின் அடிப்படைலேயே தமிழிசை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கை வெளியீடு
இந்த விருதை பெறுவதற்காக நேற்று புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். விருது விழாவினை தொடர்ந்து சிகாகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் தமிழிசை கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக தமிழிசை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
அந்த அறிக்கையில் அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண் தலைவர் என்று சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8-வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்
விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மற்றும் சிகாகோ, வாஷிங்டன் மற்றும் பாஸ்டன் நகரின் தமிழ்சங்கங்களின் அழைப்பை ஏற்று கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து பாஜக தரப்பிலிருந்து தமிழிசைக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இந்த விருதினை பெற்றுக் கொண்டு தமிழிசை நவம்பர் 3-ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.