Women's Day: போராட்டம், இன்னல்களை தாண்டி தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்களை போற்றுவோம்!
சென்னை: பெண்மையை போற்றுவோம். மாதராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டுமம்மா என்ற கூற்றிற்கு ஏற்ப பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆணுக்கு பெண் சமம் என்பதற்கேற்ப இன்றைய காலகட்டங்களில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறி வருகின்றனர்.
பாரதி கண்ட புதுமைப் பெண்களாக உலா வரும் நிலையில் பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டும் கிடையாது. அது சமூகநீதி என்பதை பல பெண்கள் இன்று மெய்பித்து காட்டியுள்ளனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவு மன உறுதி கொண்டவர்கள்.
அனைத்து நிலைகள்
அதனால்தான் ஒரு கருவை 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுக்கும் பாக்கியம் பெண்களுக்கு கிடைத்துள்ளது. பெண்கள் தோல்விகளை கண்டு மன துவண்டு போவதில்லை. 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாலும் அடுத்த முறை 15 அடி உயரத்துக்கு செல்லும் அளவிற்கு பெண்களின் விடா முயற்சி இருக்கும். தாயாக, மனைவியாக, தங்கையாக, அக்காளாக, மகளாக இன்று நம் உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்.
பெண்களுக்கு நிகர்
பெண்கள் தினம் சர்வதேச மகளிர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மார்ச் 18, 1911 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து 1913-ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகம், பரிவு, பாசம், அன்பு, பொறுமை காட்டுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
கோலோச்சும் பெண்கள்
அரசியல், அறிவியல், கல்வி, விஞ்ஞானம், விண்வெளி, விளையாட்டு, நாடாளுமன்றம், சட்டமன்றம், ராணுவம், கடற்படை, விமான படை என பெண்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். அதில் சாதனை செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர். ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படும் எல்லை பாதுகாப்பு பணிகளிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர்.
உருத்தெரியாமல்
ஒரு பெண் நினைத்தால் ஒரு குடும்பம் முன்னேற்றத்தை அடைவதும், உருத்தெரியாமல் போவதும் சாத்தியம். மாநில அரசுகளால் மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் தன் சொந்த செலவில் முன்னேற்றங்களை கொண்டு வந்து தனியார் பள்ளிக்கேற்ப அரசு பள்ளிகளின் தரத்தை தனது விடாமுயற்சியால் மாற்றிடும் பெண் ஆசிரியர்களை என்னவென சொல்வது? பெண்கள் தினம் தொடங்கி 106 ஆண்டுகள் முடிந்து விட்டது என கூறினாலும் ஒரு பக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
Recommended Video
நம்புவோம்
பெண்களை விட ஆண்களுக்கு வலிமையை கொடுத்ததே அவர்கள் ஆபத்திலிருக்கும் போது உதவுவதற்குத்தான். ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் போராட்டமே வாழ்க்கையாகி ஒவ்வொரு நொடியும் பல்வேறு இன்னல்களை தாண்டி தடைகற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்களை போற்றுவோம். இனி வரும் ஆண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் குறையும் என நம்புவோமாக!