அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை.. பரிசீலனையில் உள்ளது.. முதல்வர் பழனிச்சாமி
Recommended Video
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான அதிமுக நேர்காணல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி மன்ற குழுவினரான வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி, மதுசூதனன் உள்ளிட்டோர் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்து முடிந்தது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள் தவிர்த்து புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும், வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. 30ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறும்.
அக்டோபர் 3ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனு பெறப்பட்டது.
தமிழகத்தின் 2 தொகுதிகளிலும் போட்டியிட 90 பேர் விருப்பமனு வழங்கியுள்ளனர். பிறகு விருப்பமனு வழங்கியவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாலை 5.15 மணி அளவில் நேர்காணல் துவங்கினர்.
தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் என்ன என்பது போன்ற கேள்விகளை, விருப்பமனு வழங்கியவர்களிடம் ஓபிஎஸ், மற்றும் எடப்பாடி கேட்டனர். இதைத்தொடர்ந்து நேர்காணல் இரவு 8மணி அளவில் நிறைவு பெற்றது. அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.