நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை... சத்யபிரதா சாஹூ பேட்டி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட்டிருக்கிறார், அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், கன்னியாகுமரியில் 3000 க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே நேரம், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை என புகார் எழுந்தது.
ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, தேர்தல் நாளன்று , காலையிலேயே சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
தொகுதி ஒன்று.. தேர்தல் மட்டும் 3 கட்டம்.. பரபரக்கும் அனந்த்நாக்!
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட்டிருக்கிறார், அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை என்றும் அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் எனவும் விளக்கமளித்தார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது என்று கூறிய சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றார். மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார் என்றும், அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்றார்.