இது தான் மாமன் மச்சான் உறவு! காதணி விழாவில் யாருன்னு பாருங்க! திமுக நிர்வாகியை நெகிழ வைத்த ஐபிஎஸ்!
மதுரை: மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்ட ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தாய்மாமன் ஸ்தானத்தில் நின்று அந்த விழாவை கவுரவித்த நிகழ்வு நடந்துள்ளது.
தாய்மாமன் என்ற வார்த்தையை வெறும் சொல்லாக மட்டும் பார்க்காமல் அதை உணர்வாக கருதக்கூடிய வழக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது.
காதணி விழாவில் ஆயிரம் பேர் கலந்துகொண்டாலும் நீங்க தான் என் பிள்ளைக்கு தாய்மாமன் ஸ்தானத்தில் அமர வேண்டும் எனக் கூறி ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை மேடைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த நிர்வாக.
மதுரை மாணவரணி
மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகியாக இருப்பவர் சின்னதுரை. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் குடும்பத்துக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தக்காரர். இதனால் ஐ.பி.செந்தில்குமாரை மாமன் மச்சான் என அவர் உரிமையுடன் அழைப்பது வழக்கம். இந்நிலையில் திமுக நிர்வாகி சின்னத்துரையின் மகளுக்கு காதணி விழா இன்று மதுரையில் நடைபெற்றது. அதில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கலந்துகொண்டார் ஐ.பி.செந்தில்குமார்.
மேடைக்கு வாங்க
மேடைக்கு கீழே அமர்ந்திருந்த ஐ.பி.செந்தில்குமாரை மேடைக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்த திமுக மாணவரணி நிர்வாகி சின்னதுரை, தாய்மாமன் ஸ்தானத்தில் நீங்கள் தான் நிற்க வேண்டும் என அன்புக் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இதனால் அதனை தட்டாமல் ஐ.பி.செந்தில்குமாரும் தாய்மாமன் ஸ்தானத்தில் அந்த மேடையில் அமர்ந்து காதணி விழாவை சிறப்பித்தார். மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட முக்கியப் பிரமுகர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழர்கள் வழக்கம்
தாய்மாமன் என்ற வார்த்தையை வெறும் சொல்லாக மட்டும் பார்க்காமல் அதை உணர்வாக கருதக்கூடிய வழக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக தென் தமிழகத்தில் இது குறித்து சொல்லவே தேவையில்லை. அந்தளவுக்கு குடும்ப விழாக்களில் தாய்மாமன்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்கப்படும்.
குடும்ப விழா
இதனிடையே ஐ.பி.செந்தில்குமார் காதணி விழாவில் அமர்ந்திருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் மேலோட்டமாக பார்த்த கட்சிக்காரர்கள் பலரும், அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதோ என்றும், நமக்கெல்லாம் அழைப்பில்லையே எனவும் நினைத்துவிட்டனர். பிறகு தான் அது மதுரையை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவரது இல்ல விழா என்ற தகவல் அவர்களுக்கு தெரிய வந்தது.