ஐபிஎல்லின் புதிய "கடப்பாரை டீம்".. இனி மும்பைதான் புதிய "கிங்"!
சென்னை: அசைக்க முடியாத புதிய அணியாக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் உருவெடுத்துள்ளது. இதுவரை அப்படி ஒரு பெருமையை வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஓரம் கட்டி ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
ஒரு முறை அல்ல.. 2 முறை அல்ல.. மொத்தம் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மும்பை. இது மிகப் பெரிய விஷயம்.
அதிக கோப்பைகளை வென்ற அணியாக முன்பு திகழ்ந்த சென்னையின் ஆளுமையை முழுமையாக தகர்த்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது மும்பை இந்தியன்ஸ்.
5 வது கோப்பை
2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என ஐந்து முறை சாம்பியனாகி அத்தனை அணிகளையும் அதிர வைத்துள்ளது மும்பை. தனது அட்டகாசமான பார்ம், உத்திகள், திறமை உள்ளிட்டவற்றால் இந்தியாவின் "ஆஸ்திரேலியா"வாக மும்பை இந்தியன்ஸ் புதிய வடிவம் எடுத்துள்ளது.
பிரித்து மேய்ந்த ரோஹித்
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இது பெருமையான வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அவரது தலைமையில்தான் இந்த ஐந்து கோப்பைகளையும் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. தொப்பை போட்டு விட்டது.. உத்திகள் சரியில்லை என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும் கூட இன்று அவர் ஆடிய ஆட்டம்.. போதுமா என்று பொட்டில் அடித்தது போல பொளேர் என இருந்ததை மறுக்க முடியாது.
பிரில்லியன்ட் உத்திகள்
ஒரு கேப்டனாக அருமையான ஸ்கோரை இன்று எடுத்தார் ரோஹித் சர்மா.. அதில் சந்தேகமே இல்லை. அதை விட முக்கியமாக பீல்டிங்கின்போது தனது பவுலர்களை அவர் பயன்படுத்திய விதம் அருமை.. அதை விட மேலாக அவரது உத்திகள் அனைத்துமே இன்று சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. சேஸிங்கை அவர் அட்டாக்கிங்காக தொடங்கியதன் மூலம் தனது அக்ரஸ்ஸிவ்னஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. பாத்துக்கங்க என்று யாருக்கோ மெசேஜ் கொடுத்தது போல தோன்றியது.
சென்னையின் பெருமை போச்சே
இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் அசைக்க முடியாத அணியாக இருந்து வந்தது. அதை அடித்து நொறுக்குவது என்பதெல்லாம் கனவில் கூட நடக்க முடியாத ஒன்று. கீப்பிங் முதல் பேட்டிங் வரை அத்தனை டிபார்ட்மென்ட்டிலும் எக்ஸ்பெர்ட்டாக திகழ்ந்து வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
புதிய ஆளுமை
ஆனால் இன்று அந்த ஆளுமையை அடித்து நொறுக்கி அள்ளிப் போட்டு விட்டனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். தொடங்கியது முதல் இன்று முடித்தது வரை எங்குமே குறை காண முடியவில்லை. எல்லாவற்றிலும் அப்படி ஒரு அருமையான ஆளுமை.. பிரித்து மேய்ந்து விட்டனர் என்றுதான் சொல்ல முடியும். ஒரு சமயத்தில் கடப்பாரை அணியாக சென்னை இருந்து வந்தது. இன்று அந்த இடத்தை மும்பை பிடித்து விட்டது.
தலை முதல் அடி வரை
உண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எல்லோருமே பெஸ்ட்டாக ஆடியுள்ளனர். கேப்டன் ரோஹித் ஒரு பக்கம், குவின்டன் டி காக் மறுபுறம். அதிரடிக்கு இஷான்இஷான். பொளேர் அடிக்கு சூர்ய குமார் யாதவ்.. நெருக்கடியில் கை கொடுக்க போலார்ட். பந்து வீச்சில் பும்ரா என எந்தப் பக்கம் திரும்பினாலும் எக்குத்தப்பான வீரர்கள். மொத்தமாக ஒரு சிறந்த அணியாக உலா வருகிறது மும்பை இந்தியன்ஸ். சந்தேகமே இல்லை.
மும்பையை அடித்து நொறுக்கி அடக்கப் போகும் அணி எது.. இதுதான் அடுத்த ஐபிஎல் தொடரின் முக்கிய கேள்வியாக இருக்கும்.. பார்க்கலாம்.