தலைவன் இருக்கிறான்.. 1 வருடம் கழித்து போன மாதிரியே திரும்பி வந்த தோனி.. விமர்சனத்திற்கு பதிலடி!
சென்னை: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வென்றதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் தோனி, தனது கேப்டன்சி வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.
கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்த தொடர் முழுக்க இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினார்கள்.
ஆனால் தோனி இதில் சரியாக விளையாடவில்லை. தோனியின் பேட்டிங்கில் வேகம் இல்லை என்று மாறி மாறி பலர் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இமேஜ் அரசியல்.. திமுகவின் தோனி பாசம்.. சிஎஸ்கேவை திடீரென பாராட்டிய ஸ்டாலின்.. இதுதான் காரணம்!
தோனி அறிவுரை
தோனி டிப்ஸ் மட்டும்தான் கொடுக்கிறார். ஆனால் பெரிதாக களத்தில் ஆடுவது இல்லை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். கங்குலி கூட அப்போது தோனியை விமர்சனம் செய்து இருந்தார். இதனால் தோனிக்கு கடுமையான அழுத்தம் வைக்கப்பட்டது.
ஓய்வு அழுத்தம்
தோனி ஓய்வு பெற வேண்டும் என்று கடுமையான அழுத்தம் வைக்கப்பட்டது. அதன்பின் இந்தியா கலந்து கொண்ட சில தொடர்களில் தோனிக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தோனி வேண்டும் என்றே வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் தோனி கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வை நோக்கி நகர்த்தப்பட்டார். அதோடு கொரோனா காரணமாக வீட்டில் தோனி முடங்கினார்.
தோனி ஓய்வு பெற்றார்
இதன் காரணமாக தோனி ஓய்வு பெற்றார். தொடர் அழுத்தம் காரணமாக மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதனால் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது. அவரின் கேப்டன்சி எடுபடாது. அவ்வளவுதான். இனி சிஎஸ்கே அணி புதிய கேப்டனைதான் தேட வேண்டும் என்று கூட பலர் விமர்சனங்கள் வைத்தனர்.
பதிலடி
ஆனால் இப்படி தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு எல்லாம் தோனி நேற்று நடந்த போட்டியின் மூலம் தோனி பதிலடி கொடுத்து இருக்கிறார். முதலில் உடல் ரீதியாக தோனி மிகவும் பிட்டாக இருக்கிறார். அதேபோல் மனரீதியாக மிகவும் புத்துணர்ச்சியோடு உள்ளார். கீப்பிங்கில் அவரின் வேகம் மீண்டும் திரும்பி உள்ளது.
கீப்பிங் வேகம்
அதேபோல் நேற்று தோனி தனது கேப்டன்சியில் அதிரடி காட்டினார். ஸ்பின் பவுலர்களை அவர் பயன்படுத்திய விதம், பியூஸ் சாவ்லா போன்றவர்களை அவர் பயன்படுத்திய விதம். சாம் கரனை அணிக்குள் கொண்டு வந்தது என்று எல்லாமே அதிரடிதான். மேலும் தான் தேர்வு செய்த வித்தியாசமான ஆடும் லெவன் அணி மூலமே, தன்னுடைய கேப்டன்சி யுக்தியை நிரூபித்தார்.
நான் வேறு மாதிரி
என்னுடைய கேப்டன்சி இன்னும் மோசமாகவில்லை. நான் இப்போதும் கிங்தான் என்பதை தோனி நிரூபித்தார்.அதிலும் தைரியமாக பிராவோவை தோனி உட்கார வைத்தது எல்லாமே அசால்ட்டு சம்பவம். 438 நாட்களுக்கு பின் தோனி நேற்று களத்திற்கு வந்தார். ஆனால் அதற்கான சுவடு எதுவும் இன்றி அவர் மிகவும் புத்துணர்வுடன் காணப்பட்டார்.
தலைவன் இருக்கிறான்
நேற்று டாஸ் போடுவதில் இருந்து கடைசி கட்டம் வரை தோனி மிகவும் புத்துணர்ச்சியோடு இருந்தார். கடைசியாக உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் கண்ணீரோடு அவர் வெளியேறினார். பலருக்கும் தோனியின் முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. ஆனால் அதை தற்போது மீட்டு, தோனி தன்னுடைய அதிரடி முகத்தை காட்டி இருக்கிறார்... நான் எங்கயும் போகல.. இங்கதான் இருக்கேன்.. இங்கதான் இருப்பேன் என்று தோனி நிரூபித்துள்ளார்.