எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்?
சென்னை: நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவர் காரணமாக ராஜஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. அவரின் அந்த ஒரு ஓவர் மொத்தமாக ஆட்டத்தின் முடிவையே மாற்றியது.
Recommended Video
ஐபிஎல் தொடரில் எப்போதும் மும்பை - சென்னை, கொல்கத்தா - பெங்களூர் அணிகள் எதிரி அணிகள் என்று வர்ணிக்கப்படுமோ அப்படித்தான் பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் சொல்லப்படாத மோதல் கதை பல ஐபிஎல் சீசன்களாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி எப்போதுமே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
அதிலும் கடைசி லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் செஞ்சுரி அடித்து கடைசி பாலில் சிக்ஸ் அடிக்க முடியாமல் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது எல்லாம் செம திரில்லர் ஸ்டோரி. நேற்று அதே ஐபிஎல் தொடரில் கடைசி பந்தில் பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் பழி தீர்த்துக் கொண்டது.
'மக்களை மருத்துவமனையில் அனுமதிக்கக்கூட முடியவில்லை.. ஆனால் ஐபிஎல்-க்கு இவ்வளவு செலவழிக்க முடிகிறதா?'
ராஜஸ்தான் பேட்டிங்
நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் கொஞ்சம் நிதானமாகவே ஆடியது. ஜெய்ஷ்வால் எப்போதும் போல கொஞ்சம் நிதானம் காட்டிவிட்டு அதன்பின் அதிரடியாக ஆடி 49 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த லோம்ரோர், லிவிங்ஸ்டன் இருவரும்தான் ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார்கள். லோம்ரோர் வெறும் 17 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ் அடக்கம். லிவிங்ஸ்டன் 17 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த ராஜஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். பஞ்சாப் அணிக்காக ஹூடா 16வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் சென்றதால் ராஜஸ்தான் அணி மொத்தமாக 185 ரன்கள் குவிக்க முடிந்தது.
பஞ்சாப்
அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணி முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிவிட்டு அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக ஆடியது. கே. எல் ராகுல் 33 பந்தில் 49 ரன்கள், மயங்க் அகர்வால் 43 பந்தில் 67 ரன்கள், பூரான் 32 பந்தில் 22 ரன்கள் என்று பஞ்சாப் அணி எளிதாக வெல்ல கூடிய சூழ்நிலையில்தான் இருந்தது. ஏனென்றால் நேற்று பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அடித்துவிட்டனர்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சனிடம் பெரிதாக கேப்டன்சி டெக்னிக் நேற்று இல்லை. ஓவர் ரொட்டேஷனும் சிறப்பாக இல்லை. ரியான் பராக்கிற்கு தேவையில்லாத நேரங்களில் ஓவர்களை கொடுத்து சஞ்சு சாம்சன் ஏமாற்றம் அளித்தார். அவரின் கேப்டன்சி காரணமாக பஞ்சாப் எளிதாக வெற்றி இலக்கை நோக்கி சென்றது. கடைசி இரண்டு ஓவரில் 8 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலை இருந்தது. இதனால் பஞ்சாப் வென்றுவிட்டது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு ஹாட் ஸ்டாரை மூடி வைத்துவிட்டு நெட்பிளிக்ஸ் பக்கம் சென்றனர்.
கடைசி இரண்டு ஓவர்
ஆனால் கடைசி இரண்டு ஓவரில் மொத்தமாக ஆட்டம் மாறியது. கடைசி இரண்டு ஓவரில் 8 ரன்கள் தேவைப்படும் போது முஸ்தபிசர் ரஹ்மான் மிக சிறப்பான 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் இரண்டு பால் டாட். அதற்கு அடுத்த நான்கு பால்கள் ஒவ்வொரு ரன் மட்டுமே கொடுத்தார். லென்த் பால், யார்க்கர் என்று ரஹ்மான் சிறப்பான வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதுதான் முதலில் பஞ்சாப் அணிக்கு எதிராக திரும்பியது. நிக்கோலஸ் பூரான், மார்க்ரம் ஆகியோர் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 4 ரன்கள் அடிக்க வேண்டும். மோசமான ஒரு பந்தில் பவுண்டரி அடித்தாலே வெற்றிதான்.
திறமை
ஆனால் கடைசி ஓவரில் பவுலிங் வீச வந்த கார்த்திக் தியாகி "ஹேட் அதர் ஐடியாஸ்". ஆம் கடைசி ஓவரில் டிபன்ட் செய்ய முடியாத 4 ரன்களை தியாகி கட்டுப்படுத்தினார். அதற்கு முன் வீசி இருந்த 3 ஓவர்களில் தியாகி 28 ரன்கள் கொடுத்தார். அதாவது ஓவருக்கு 9 ரன்களுக்கும் அதிகம். ஆனாலும் கடைசி ஓவரில் மிகவும் நிதானமாக, ஒவ்வொரு பந்தையும் திட்டமிட்டு வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை லோ புல் டாஸ் வீசினார். யார்க்கர் போட முயன்று லென்த் சரியாக இல்லாமல் அது லோ புல்டாஸ் ஆகியது. இருந்தாலும் அந்த பந்தில் ரன் செல்லவில்லை.
என்ன நடந்தது?
அடுத்த பந்தும் கிட்டத்தட்ட யார்க்கர்தான். ஆனால் அதில் ஒரு ரன் சென்றுவிட்டது. கடைசி 4 பந்துகளில் 3 ரன் அடிக்க வேண்டும் என்ற போதுதான் மூன்றாவது பந்தில் ஆட்டம் மாறியது. கிட்டத்தட்ட யார்க்கர் போல வீசிய பந்தை கணிக்க தவறிய பூரான் எட்ஜ் ஆகி சஞ்சுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின் இறங்கிய ஹூடாவிற்கும் இதேபோல் நியர் யார்க்கர் பந்துகளை கார்த்திக் தியாகி வீசினார். அந்த பந்திலும் ரன் எதுவும் அடிக்க முடியவில்லை.
ட்விஸ்ட்
இதன்பின் ஆட்டத்தில் அடுத்த ட்விஸ்ட் நடந்தது. கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் 5வது பந்தில் தியாகி துல்லியமான அவுட் சைட் ஆப் பந்தை கணிக்க தவறி சஞ்சு சாம்சனிடம் ஹூடா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் தியாகி துல்லியமான யார்க்கர் வீசி ரன் எதுவும் கொடுக்காமல் ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். ராஜஸ்தான் அணிக்காக இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஓவர்களில் ஒன்றை வீசி அந்த அணியை தியாகி வெற்றிபெற வைத்தார். இவரின் பவுலிங்கை பாராட்டி மொத்த மைதானமும் எழுந்து நின்று கரகோஷம் செய்தது.
லக்
இதில் சஞ்சு சாம்சன் டெக்னிக் என்று எதுவும் இல்லை. கார்த்திக் தியாகியை அவர் பெரிதாக வழி நடத்தவும் இல்லை. முழுக்க முழுக்க அண்டர் 19 உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் ராகுலுக்கு கீழ் தியாகி கற்றுக்கொண்ட பாடங்களை நேற்று சிறப்பாக வெளிப்படுத்தினார். கொஞ்சம் லக் நிறைய திறமை என்று கலந்து கட்டி தியாகி வீசிய பந்துகள்தான் வெற்றிபெற முடியாத போட்டியில் ராஜஸ்தானை வெற்றிபெற வைத்தது.