பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. தானாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் டிஜிபிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க தமிழக அரசின் முதன்மை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்மையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்புக்காக சென்னையிலிருந்து தமிழக அரசின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்றிருந்தார்.
நுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா
அப்போது டிஜிபி என்ற முறையில் அவரை வரவேற்க வந்த மாவட்ட பெண் எஸ்.பி. ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன் ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
எஸ்பி பயணம்
இந்த சம்பவத்தில் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளான மாவட்ட பெண் எஸ்பி சென்னையில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக தனது காரில் ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானப்படுத்த முயற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது.
புகார் வேண்டாம்
இந்நிலையில், கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் அவரது காரை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து, ராஜேஷ்தாஸ் குறித்து டிஜிபியிடம் புகார் செய்ய வேண்டாம்; இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும்; ஒருமுறை ராஜேஷ் சாருடன் செல்போனில் பேசுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறியதாக புகார் எழுந்துள்ளது.
புகார் கொடுத்தார்
மேலும், தன்னுடன் இருந்த செங்கல்பட்டு டிஎஸ்பி மூலமாக பெண் எஸ்பி.யின் கார் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டாராம். அவர் உங்கள் மீதும் புகார் அளிப்பேன் என்று எச்சரித்த பின்னர் கார் சாவியை கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிஜிபி திரிபாதியை சந்தித்த பெண் எஸ்பி, ராஜேஷ்தாஸ் மீது புகார் கொடுத்துள்ளார்.
தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இதனிடையே பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகையில் வெளிவந்த செய்தியை ஆதாரமாக வைத்து இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயகாந்த்ரன், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் இரண்டு வாரத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.