ஆண் வாழைக்காயுடன் நிற்க கூடாது.. பெண்களை ஆடை அவிழ்த்து ஆடவிடலாமோ? ஆணாதிக்கத்திற்கு விழுந்த 'குத்து'
சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின், 2வது பாகமாக, 'இரண்டாம் குத்து' என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானதும் வெளியானது, தமிழகம் முழுக்க சூடு பறக்கிறது வாதங்கள்.
ஒரு பெண் பிகினி ஆடையில் நிற்க, இரு பக்கமும் இரு ஆண்கள் (ஒருவர் கவுதம் கார்த்தி) பெரிய வாழைப் பழத்தை தூக்கி பிடித்தபடி நிற்பது போல முதல் லுக் வெளியாகியிருந்தது. அடுத்த லுக்கில், ஆணும் பெண்ணும் ஜோடியாக டிரெஸ் இல்லாமல் பேப்பர் பின்னால் நிற்பது போல காட்சி இருந்தது.
இந்தப் படங்களை பார்த்துவிட்டு பொங்கிவிட்டார், இயக்குநர் பாரதிராஜா. கண் கூசுகிறது என்று காட்டமாக சொன்னார்.
ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
பழைய படங்களில் ஆபாசம்
ஆனால், இதற்கு இரண்டாம் குத்து இயக்குநர் சந்தோஷ் அளித்த பதில், அவர் போஸ்டரை விடவும் அதிக அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 1981ஆம் ஆண்டு 'டிக்.. டிக்.. டிக்..' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?" என்று கூறி, கமல்ஹாசனை சுற்றிலும் பிகினியில் 3 ஹீரோயின்கள் நிற்கும், டிக்..டிக்..டிக்... படத்தின் போஸ்டரையும் தனது பதிவில் இணைத்துள்ளார். "இது ஒரு அடல்ட் படம்.. வெளிநாடுகளில் இப்படியான ஜானரில் படம் வருவது சகஜம்.. நான் அதைத்தான் முன்னெடுக்கிறேன்.." இப்படி ஏதாவது ஒரு பதிலை, இரண்டாம் குத்து இயக்குநர் கூறியிருந்தால் கூட இயல்பாக கடந்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், மண் வாசனையோடு, பல மறக்க முடியாத படங்களை படையல் வைத்த பாரதிராஜாவுக்கு இப்படியா பதில் சொல்வது என்று சந்தோஷ் டுவிட்டர் பக்கத்துக்கே போய் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் சந்தோஷ் விடவில்லை. அலைகள் ஓய்வதில்லை படத்தில், பூக்களுக்கு நடுவே, கார்த்திக்-ராதா இருவரும் நிர்வாணமாக படுத்திருக்கும் பாடல் காட்சியை ஷேர் செய்து மறுபடியும் பாரதிராஜாவுக்கு மறைமுகமாக பதில் கூறியுள்ளார்.
சர்ச்சை நாயகன் 'வாழைப்பழம்'
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இரு இயக்குநர்கள் இடையேயான விவாதத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஏன் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதை பார்ப்போம்.. இங்கு சர்ச்சைகளின் நடு நாயகன் 'வாழைப்பழம்தான்'. அந்த ஆண்கள் வாழைப்பழத்தை கையில் வைத்திருப்பது போல போஸ்டர் வராவிட்டால், பர்ஸ்ட் லுக், 2வது லுக் இரண்டுமே எளிதாக கடந்து செல்லப்பட்டிருக்கும். அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் நிற்கும் போஸ்டர்கள் பள்ளிக் கூடங்களுக்கு அருகே கூட ஒட்டப்படுவதை பார்த்து வளர்ந்த தமிழ் சமூகம்தான் நாம். எனவே அங்கே பிகினியில் பெண் நிற்பது நமக்கு பிரச்சினையாக தெரியவில்லை. ஆண் வாழைப்பழத்தோடு நிற்பது பெரும் பிரச்சினையாக தெரிகிறது.
தெருவில் பெண்கள் போஸ்டர்
ஆணை விட பெண்களுக்கு கூச்ச உணர்வு அதிகம். ஆண் வாழைப் பழத்தை வைத்திருக்கும் போஸ்டரை, பெண்கள் பார்த்துவிட்டால் என்னாகும் என்று பதறுகிறோம்.. கூசுகிறோம்.. ஆனால் என்றாவது தெருவில் ஒட்டப்பட்ட டூ பீஸ் ஹீரோயின் போஸ்டர்களை, பெண்கள் கடந்து செல்லும்போது அவர்கள் மனநிலை இப்படித்தானே இருந்திருக்கும் என்று.. இத்தனை வருடங்களில் என்றாவது நாம் யோசித்தோமா? குடும்பத்தோடு செல்லும் படங்கள் மட்டுமா, ஷகிலா போன்றோர் நடித்த பி கிரேட் படங்களின் காட்சியையும் ஒட்டி வைத்து, 11 மணி காட்சிக்கு வாங்க.. வாங்க.. என்று கூப்பிட்ட போஸ்டர்களை பார்த்து ஆண்களுக்கு என்றாவது குற்ற உணர்ச்சி வந்துள்ளதா?
குத்துப்பாட்டு வைப்பது ஏன்?
ஒவ்வொரு படத்திலும் குத்துப்பாட்டுக்கு என்று சில்க், அனுராதா போன்றோரை பயன்படுத்தி, ஆடையை அவிழ்த்து, குத்தாட்டம் போட விட்டபோது, குடும்பத்தோடு தியேட்டர்களில் அதை பார்த்து ரசித்த இதே சமூகம்.. இப்போது, ஆண்களை ஆபாசமாக காட்டும்போது மட்டும், தமிழ் கலாச்சாரம் பறி போய்விட்டது என்று பதறுவதில் என்ன அறம் இருக்க முடியும்? வெள்ளை ஆடையுடன், மழை தண்ணீரில் குளிக்க விட்டு, அங்கங்கள் பளிச்சென தெரிய ஹீரோயின்களை ஆட்டம் போட விட்டு ரசித்துவிட்டு, ஆண்கள் ஜட்டியோடு நிற்க கூடாது என்று கூறுவதன் குதர்க்கம்தான் என்ன?
பெண்களுக்கு ஒரு நீதியா?
ஆண்குறியை கும்பிடுவது போல பெண்களை அடிமைப்படுத்தி காட்சியமைக்கும் 'வர்மாக்கள்' வரும்வரை, 'இரண்டாம் குத்தும்' இந்த சமூகத்திற்கு புதுவரவாக.., மாற்றத்தின் குரலாக.., இருக்க வேண்டியது அவசியம்தானே? ஆண்கள் மறுமணம் செய்யலாம், பெண்கள் உடன்கட்டை ஏறலாம் என்ற கொள்கைக்கும், பெண்களை அவிழ்த்து விட்டு ஆடவிடலாம், ஆண்கள் வாழைப்பழத்தை கையில் வைப்பது குற்றம் என கூறும் சமூகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிட முடியும்?
பல குத்துக்கள் விழும்
ஆணும் பெண்ணும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு. பெண்களை பிகினியில் ஆட விட்டு ஆண்களை ஆதர்ஷ நாயகனாக மட்டும் காட்டி.. காலம் காலமாக அரசியல் சாசனத்திற்கே எதிரான மனநிலையை சமூகத்தில் விதைத்துள்ளது இந்திய திரையுலகம். ஒன்று.. பெண்களை கண்ணியமாக காட்டுங்கள்.. அல்லது ஆண்களை அரைகுறையாக காட்டுவதை எதிர்க்காதீர்கள். இரண்டில் ஒன்றுக்கு மட்டும் உங்கள் குரல் எழுமானால், இரண்டாம் குத்து மட்டுமல்ல.. இன்னும் 'பல குத்துக்கள்' அவசியமே!