நீட் ஆள்மாறாட்டம்.. மாணவர் இர்பானின் தந்தை மூளையாக செயல்பட்டாரா? விசாரணையில் திடுக்!
சென்னை: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் இர்பானின் தந்தை மூளையாக செயல்பட்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தற்போது விஸ்ரூபம் எடுத்து வருகிறது. உதித் சூர்யா சிக்கியதை அடுத்து சங்கிலி தொடர் போல் அடுத்தடுத்து மாணவர்கள் சிக்கி வருவது மக்கள் மனதில் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் மருத்துவம் இல்லாவிட்டால் அதனுடன் தொடர்புடைய ஏராளமான படிப்புகள் இருக்க மருத்துவ படிப்புக்காக ஆள்மாறாட்டம் செய்து தற்போது தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே இந்த பெற்றோர்கள் கேள்விக்குறியாக்கிவிட்டனர்.
விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைது
விசாரணை
சென்னை மாணவர் உதித் சூர்யாவுக்காக அவரது தந்தை வெங்கடேசன் இது போன்ற காரியத்தில் இறங்கி தற்போது இருவரும் சேர்ந்து தேனி மாவட்ட சிறையில் 15 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது போன்று சென்னையை சேர்ந்த பிரவீண் அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிட் உள்ளிட்டோர் கைதாகி அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
போலீஸ் வளையத்தில்
இது போல் சென்னை திருப்போரூர் கல்லூரி மாணவி அபிராமியிடம் முக்கிய ஆவணங்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் போலீஸ் வளையத்தில் இருக்கும் அவரும் சிறையில் தள்ளப்படுவார் என தெரிகிறது.
தப்பித்தல்
இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இர்பான் என்ற மாணவர் கடந்த 6-ஆம் தேதி வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். அவரது தந்தையும் வெளிநாட்டுக்கு தப்பியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
6 பேரும் மருத்துவர்கள்
ஆனால் இன்றைய தினம் அவரது தந்தை முகமது சஃபி வேலூரில் கைது செய்யப்பட்டார். அவர் வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடன் பிறந்த அண்ணன், தம்பிகள் என 6 பேருமே மருத்துவர்கள்.
மூளையாக செயல்பட்ட முகமது
இதனால் தனது மகன் இர்பானையும் மருத்துவராக்க இவர் ஆள்மாறாட்டம் செய்ய துணிந்தார் என தெரிகிறது. இர்பான் கூறியதன் பேரில் அவருக்கு தெரிந்த மாணவர்களுக்கும் முகமது சஃபி புரோக்கரை அறிமுகப்படுத்தி இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கில் பணம்
இதனால் அவரை கைது செய்த போலீஸார் , விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் உயரதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இர்பானை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.