கடைசி நிமிடங்கள்.. "தொற்று இருப்பது தெரியாம அல்வா விற்றேனே".. வேதனையில் தவித்த இருட்டுகடை ஹரிசிங்
இருட்டு கடை உரிமையாளர் ஹரிசிங்கின் இறுதி நிமிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: "தொற்று இருப்பது எனக்கு முன்னாடியே தெரியாமல் போச்சே.. இது தெரியாமலேயே அல்வா விற்று வந்தேனே.. என் மூலம் எத்தனை பேருக்கு பரவியதோ? என் கடைக்கு கெட்ட பெயர் வந்துடுச்சே.. என் குடும்பத்தினருக்கு கஷ்டத்தை தந்துவிட்டேனே" என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு புலம்பினாராம் இருட்டுக்கடை அல்வா ஓனர் ஹரிசிங்!!
தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா... ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த கடை தொடங்கப்பட்டது.. கிருஷ்ணசிங் என்பவர்தான் இந்த லாலா கடையை முதன்முதலில் தொடங்கினார்.
தினமும் சாயங்காலம் 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த கடையில் குண்டு பல்பு எரியும்.. அந்த பல்பு 40 வாட்ஸ் என்பதால், வெளிச்சம் குறைவாக இருக்கும்.. அதனால்தான் இருட்டுக்கடை அல்வா என்று பெயர் வந்தது. நெல்லையில் வழக்கமாகவே அல்வா ஃபேமஸ்.. இதில் ஹரிகேன் விளக்கை எரிய வைத்ததால், இந்த கடை கூடுதல் ஃபேமஸ்.
அசர வைத்த கதை.. ஒரு 40 வாட்ஸ் பல்பில் இருட்டுக்கடைக்கு "வெளிச்சம்" கொடுத்தவர்.. யார் இந்த ஹரிசிங்!?
ஹரிசிங்
இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்... இப்போது அவருடைய 3-ம் தலைமுறை வாரிசுகளால் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடையின் ஓனராக இருந்தவர்தான் ஹரிசிங்.. கொரோனா இருப்பது உறுதியானது தெரிந்ததுமே தற்கொலை செய்து கொண்டார்.
சிரித்த முகம்
அடிப்படையிலேயே ஹரிசிங் ரொம்பவும் மென்மையானவர்.. யாரிடமும் அதிர்ந்து பேசியதில்லை. அவர் டென்ஷன் ஆகியும், கோபமாகியும்கூட யாருமே பார்த்ததில்லை.. இவருடைய 2 மகள்களில் ஒரு மகள் சில வருஷத்துக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அப்போதிருந்தே அப்செட்டில் இருந்தார் ஹரிசிங். இருந்தாலும் தன் கஷ்டத்தை வெளியில் காட்டி கொள்ளாமலேயே இருந்துள்ளார்.
பாசிட்டிவ் ரிசல்ட்
சிறுநீரக தொற்று என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததுமே அதிர்ந்துபோனார்.. அளவுக்கு அதிகமாக பயந்தும் போனார்.. கடைசியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட, தன்னால் அடுத்தவங்களுக்கு கஷ்டம் வந்துவிட்டதே என்றுதான் அங்கிருந்தோரிடம் கவலைப்பட்டுள்ளார்.
வேதனை
"எனக்கு தொற்று இருப்பது தெரியாமல் போச்சே.. இது தெரியாமலேயே அல்வா விற்று வந்தேனே.. என் மூலம் எத்தனை பேருக்கு பரவியதோ? என் குடும்பத்துல எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு இப்படி சிரமத்துக்கு ஆளாகிறார்களே" என ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வேதனைப்பட்டிருக்கிறார்.. இதுதான் அவருடைய கடைசி புலம்பல்.
Recommended Video
பின்னாடியே வர்றேன்
அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை போக வேண்டும் என்று சொன்னதுமே, "நீங்க போங்க, இதோ பின்னாடியே வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு, அதே அறையில் தூக்கு போட்டு தொங்கி விட்டார் என்கிறார்கள்.. ஆனால், ஹரிசிங்குக்கு ஏற்பட்ட பயத்தை போலவே தொற்று பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களில் சிலருக்கும் பயம் இருக்கிறது.. இந்த பயத்தை உடனடியாக போக்க வேண்டியது அரசின் கடமை.. பாதிப்பு உள்ளவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தந்து, அவர்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெற வேண்டிய பொறுப்பையும் தமிழக அரசு உணர வேண்டி உள்ளது!