காலம் போடும் கோலம்... அரசியலுக்கு வருகிறாரா அஜித்?
சென்னை: படம் வந்தாலே திருவிழாவாக மாறும், சமூக வலைதளங்களை ரசிகர்களின் ஹேஷ்டேக் ஆளும் என்ற நிலையில், நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்பதை இங்கே பார்ப்போம்.
ஒரு பைக் மெக்கானிக் ஆக தனது வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக உள்ளார். கொஞ்சம், நஞ்சம் இல்லை, ஒவ்வொரு முறையும், விழுந்து, விழுந்து தன்னை தன்னம்பிக்கை நாயகனாக அஜித் உருமாற்றிக் கொண்டுள்ளார்.
சினிமாவில், யாருடைய பின்புலமும் இல்லாமல் தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்ட நடிகர் அஜித், தான் விரும்பி செல்லாவிட்டாலும், தன்னை நோக்கி பல பதவிகளும், பொறுப்புகளும் தேடி வருகிறது என்றே சொல்லலாம்.
சினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து!
ரஜினிகாந்த் வாய்ஸ்
முன்னர், 1996 வாக்கில், ரஜினிகாந்த் தந்த அரசியல் வாய்ஸ் போல், இன்றைக்கு அஜித்குமார், அரசியல் ஆதரவு வாய்ஸ் கொடுத்தாலே போதும், அரசியலில் அதிர்வலை ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அரசியலை பொறுத்த மாட்டில் பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் தொடங்கி பாஜக வரை யாருக்கும் அஞ்சாமல் பதிலளித்தவர்.
திட்டம் தீட்டி வருகிறார்
சினிமா ஆடியோ வெளியிட்டு விழாவில், நடிகர் ஆரி பேசும் போது கூட, விஜய்யை பற்றி நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனால் அஜித்தை பற்றி ஒரு விஷயம் தான் சொல்ல ஆசைப்படுவதாகவும், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றதும், அரங்கமே அமைதி ஆனாது. ஆனால் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த வரைபடத்தை வைத்து, நலத்திட்டங்களை அஜித் தீட்டி வருகிறார் என்றும் வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகத்தை எப்படியெல்லாம் வளர்ச்சி அடைய செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார் என்றும் கூறினார். இதனை அஜித்துக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தன்னிடம் சொன்னதாகவும் அவர் விளக்கமளித்தார்.
ரசிகர்கள் ஆதரவு
குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிந்த விஷயத்திற்காக, ஒட்டுமொத்த ரசிகர் மன்றத்தையே கலைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டவர் நடிகர் அஜித்குமார். தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினாலும், அவர்களை தனது சுயலாபத்திற்காக எப்போதும் பயன்படுத்த மாட்டேன் என்பவர் அவர்.
பாஜக மறைமுக அழைப்பு
சமீபத்தில், பாஜக கட்சியினர் அஜித்தை தங்கள் கட்சியில் இணையும்படி மறைமுக அழைப்பு விடுத்தனர். எதற்கும், மௌனம் காக்கும் அஜித்குமார், இந்த விஷயத்தில் அதிரடியாக அறிக்கையை உடனே வெளியிட்டார். அதில், எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
வா தலைவா
40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன் என்று பிரபல இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்.
அஜித் முடிவு
சினிமாவில் தனக்கென தனிப் பெரும் பட்டாளத்தை அஜித்குமார் வைத்திருந்தாலும், ஒரு காலத்தில் கார் ரேஸ் தான் வாழ்க்கை என இருந்தவர், சினிமாவில் போதிய கவனம் செலுத்தாததால், பெரும் சரிவை சந்தித்தார். சினிமாவை விட்டே செல்லக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதுபோன்ற தோல்விகளை மற்ற நடிகர்கள் கொடுத்திருந்தால், சினிமா உலகம் மறந்தே இருக்கும் என்றே சொல்லலாம். இன்றைக்கு அரசியல் வேணாம், அஜித்தே போதும் என்று கூறும் ரசிகர்கள், நாளை அஜித் ஒரு முடிவு எடுத்தால் அதனை மறுக்கவா போகிறார்கள்.
காலம் போடும் கோலம்
தொழில்நுட்பத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அஜித்குமார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பகுதிநேர ஆலோசகராகவும் பணியாற்றினார். அதில் வெற்றியும் கண்டார். மெக்கானிக், மாடல், கார் ரேஸ், சினிமா என மாறி, மாறி தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்தாலும், சில நேரங்களில் காலம் போடும் கணக்குக்கு, நாம் தப்ப முடியாது என்பதே நிதர்சனம்.
இது முடிவல்ல, இனி தான் ஆரம்பம்... என்று அஜித் பாணியிலேயே சொல்லலாம்