யப்பா.. உறுத்தும் கவர்ச்சி.. பொங்கும் உணர்ச்சி, பெருகும் தாய்மை.. விழி பிதுங்கும் டாஸ்க்குகள்
பிக்பாஸ் வீட்டில் உணர்வுகளை தூண்டிவிடும் டாஸ்க் தரப்பட்டு விடுகிறது
சென்னை: நம்ம வீட்டில் கரண்ட் போனவுடன், நமக்கு வரும் முதல் கவலை அடுத்தவர் வீட்டுக்கும் கரண்ட் போய்விட்டதா என்று எட்டிப் பார்ப்பதுதான். அங்கும் போய்விட்டால் நிம்மதி... ஆனால் போகவில்லையென்றால் அவ்வளவுதான்? அந்த வீட்டுக்கு மட்டும் கரண்ட் இருக்கிறதே என்ற பொறுமல்தான் நிலவும். இதுதான் மக்களின் இயல்பு மனநிலை.
இந்த யுக்தியைதான் பிக்பாஸ் பயன்படுத்தி கொண்டுள்ளது. அடுத்தவர் வீட்டை ஆவலுடன் எட்டிப் பார்க்கும் மக்களின் மனஓட்டம்தான் இந்த நிகழ்ச்சியின் ஜீவநாடியே!
இந்த பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சில டாஸ்க்குகள் பாராட்டத்தக்கவையாக இருக்கின்றன. மனித திறமைகளை வெளிக்கொணரும் ஒரு பிளாட்பாரமாக இருக்கின்றன.. அதற்கேற்றபடி பலரும் திறமைசாலிகளே.. உணர்வுபூர்வமானவர்களே.. அன்பும், அக்கறையும், தியாகமும், தாய்மையும் கலந்த நபர்களே.. அதை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
அதேசமயம், டாஸ்க் என்ற பெயரில் விளையாட்டுக்களோ, போட்டிகளோ, நடைபெற்றால், மனித இயல்புகள் அப்பட்டமாக வெளிப்படவே செய்யும். அப்போது அவர்களிடமுள்ள இயற்கை குறைகளான கோபம், சிரிப்பு, ஆத்திரம், அழுகை, என பீறிட்டு வரத்தான் செய்யும். இயல்பாக வெளிப்படும் அந்த உணர்வுகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புரோமோ முதல் டிஆர்பி ரேட் ஏற்றி வியாபாரமாக்குவதா? என்ற கேள்வியையும் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
இந்த வாரம்கூட ஒரு டாஸ்க் தரப்பட்டுள்ளது.. ஒருத்தரை வெறுப்பேத்தி போனை கட் பண்ண வைக்கணும். இல்லாவிட்டால் அடுத்த வாரம் நேரடியாக அவர்கள் எவிக்ஷனில் நாமினேட் ஆகிடுவாங்க... இதுதான் அந்த டாஸ்க்.. விசித்திரமான டாஸ்க்.. ஏற்கவே முடியாத டாஸ்க்.. வெறும் விளையாட்டு என்று மட்டும் கடந்து விட முடியாத டாஸ்க்! மனித உணர்வுகளுக்கிடையே மோதல் ஏற்படும்படியான நெருக்கடியும் அழுத்தமும் தரப்படும்போது, அதற்கேற்ப சூழல் உருவாக்கப்படும்... இந்த டாஸ்க் முடிந்தும் கூட பிரிந்து செல்ல முடியாது... அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்தாக வேண்டும்.
இதில் சுரேஷ் தவிர வேறு யாரும் இதை சரியாக கையாளவில்லை.. பாலாஜியும் திணறிவிட்டார்.. சமூக அக்கறையாளர் ஆரியும் இதற்கு சிக்கி கொண்டார்.. அதுதான் நேற்று முன்தினம் நடந்தது.. உணர்ச்சிக்கு அடிமையாகி கோபப்படாமல் வெளியே வர வேண்டும் என்று என்னதான் நினைத்தாலும், இழப்புதான் ஏற்படும்... ஏற்கனவே இது ஏற்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து ஏற்படவும் செய்யும்.
சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே!
ஒரு விளையாட்டை எப்படி கையாள்கிறோம் என்ற மனநிலைதான் பிக்பாஸ் என்ற மேலோட்டமாக லாஜிக் சொல்லி கொண்டாலும். இதில்தான் போட்டியும் சுவாரஸ்யமும் என்று காரணங்களை முன்வைத்தாலும், ஏற்கவே முடியவில்லை.. இன்னும் திறன்பட டாஸ்க்குகளை தந்தால் சிறப்பாக இருக்கும்!
இந்த வீட்டில் 60 காமிராக்களுக்கும் மேல் இருப்பதாக சொல்கிறார்கள்.. எதற்கு இவ்வளவு கேமிராக்கள்? ஒருவர் உண்மையானவரா, பொய்யானவரா என்பதை கண்டறியவா? காமிராக்களை வைத்து எது கண்காணிக்கப்படுகிறது? போட்டியாளர்களின் பேச்சா, மனமா, குணமா? மனிதர்கள் என்றாலே குறையுள்ளவர்கள்தானே? அனைவரிடத்திலும் ஒவ்வொரு குறை இருக்கத்தானே செய்யும்?
60 இல்லை 60 ஆயிரம் கேமிரா வைத்தாலும் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டறியவும் முடியாது, தீர்மானிக்கவும் முடியாது என்பதே உண்மை. காலங்காலமாக கூடவே குடும்பம் நடத்தும் சில மனைவி, கணவன், பெற்ற பிள்ளைகளின் உண்மை நிலை பற்றியோ, அவர்கள் உண்மையா, போலியா என்பதையே கண்டறிய முடியாதபோது இதெல்லாம் எம்மாத்திரம்?!