பன்னீருக்கு கை கொடுத்த டெல்லி? எடப்பாடிக்கு கட்டம் கட்ட.. அடுத்தடுத்த சம்பவம்.. அதிர்ந்துபோன ஈபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையான அதிகாரத்தோடு கைப்பற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ள சமயத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இருவர் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எஸ்.பி.வேலுமணியின் வலதுகரமான வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு கேட்டு டெல்லிக்குச் சென்று வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் மீது ஐடி ரெய்டு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவர் சொல்லித்தான் வேலுமணி மீது ரெய்டு.. ஓபிஎஸ் பின்னாடி ஸ்டாலின் இருக்காரு- சி.வி.சண்முகம் ஒரே போடு!
அதிமுக யாருக்கு?
அதிமுகவில் கடுமையாக நிலவி வரும் ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர். இதற்கிடையே, தனக்கு ஆதரவு கேட்டு டெல்லி சென்று வந்தார் ஓபிஎஸ். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் ஓபிஎஸ்ஸூக்கு பாஜக தனது ஆதரவுக் கரத்தை நீட்டுகிறதோ எனும் கேள்வியை எழுப்பியுள்ளன.
அடுத்தடுத்து ரெய்டு
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளில் ஏற்கனவே சிக்கியவருமான வடவள்ளி சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் செய்யாதுரை தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் கை ஓங்கி வரும் நிலையில், அவரது தரப்புக்கு நெருக்கமான இருவர் மீது வருமான வரித்துறை கை வைத்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வடவள்ளி சந்திரசேகர்
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான இவர், கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார் சந்திரசேகர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் உள்ளன. அதன் அடிப்படையில் வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இரண்டு முறை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் வேலுமணி மற்றும் சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
ஐடி ரெய்டு
இந்நிலையில் இன்று காலை முதல் சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்யாதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் ஆட்டுத் தோல் வியாபாரி செய்யாதுரை. இவர் மற்றும் இவரது மகன் நாகராஜன் ஆகியோர் நடத்தும் நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ. முந்தைய அதிமுக ஆட்சியில் எஸ்பிகே நிறுவனம் தமிழக அரசின் சாலை மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கி, பல்வேறு டெண்டர்கள் இந்த நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டன. செய்யாதுரை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
பரபர சோதனை
இந்நிலையில், செய்யாதுரை மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாதுரையின் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் ஓபிஎஸ் கேட்ட உதவியும், பாஜக தலைமையின் தலையீடும் இருக்கலாம் என சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன.