பெட்ரோல் குண்டுவீச்சு.. தமிழகத்தில் “புல்டோசர்” மாடலா? பாஜக வெளியிட்ட இந்த “போட்டோவை” பாருங்க
சென்னை: பாஜக அலுவலகம் மற்றும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் சூழலில் உத்தரப்பிரதேசத்தைபோல் புல்டோசர் மாடலை தமிழ்நாட்டில் பாஜக பரிந்துரைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.
பெட்ரோல் குண்டுவீச்சு.. சிசிடிவி வீடியோ கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
பெட்ரோல் குண்டு
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள். இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கார் எரிக்கப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டியிலும் பாஜக நிர்வாகியின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அத்துடன் தேனியில் பாஜக நிர்வாகி கார் கண்ணாடி இன்று உடைக்கப்பட்டு இருக்கிறது.
டிஜிபி சைலேந்திரபாபு
பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பி.எஃப்.ஐ., எஸ்டிபிஐ அமைப்புகளை சேர்ந்த சுமார் 20 பேர் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சிறுகுறு தொழில்துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா, "தமிழகத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வீடுகள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
பாஜக ட்விட்டர்
மத்திய அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா தெரிவித்து இருக்கும் இந்த தகவலை தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்கள். அதில் அமைச்சரின் புகைப்படத்துடன் பெரிதாக புல்டோசர் வீடுகளை இடிப்பதை போன்ற படமும் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் மறைமுகமாக புல்டோசர் மாடலை தமிழ்நாடு பாஜக வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.