விரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்
திமுக கூட்டணி உடைந்தால் லாபம் என்று சில கட்சிகள் காத்துள்ளன
சென்னை: ரொம்ப சிம்பிளாக ஒரு வலை விரிக்கப்பட்டு வருகிறது.. இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் இதில் சிக்கப் போவது யார்.. சிக்காமல் தப்பி அசத்தப் போவது யாரு என்பதுதான் மக்கள் காணக் காத்திருக்கும் ரிசல்ட்டாகும்.
வலையை விரித்திருப்பது பாஜக.. திமுகவுக்குத்தான் அந்த வலை என்பதும் மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் இந்த வலையில் திமுக விழுந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் காங்கிரஸ் உள்ளது. அதேசமயம், திமுக வலையில் விழுந்தால் அதை வைத்து லாபம் காண சில கட்சிகள் ரொம்ப ஆர்வத்துடன் காத்துள்ளன.
இதுபோன்ற செயல்கள் எல்லாம் கருணாநிதி காலத்தில் நடந்திருந்தால் வேறு மாதிரியான விளைவுகளே படு வேகமாக கண்டிருக்கும் தமிழக அரசியல் களம். அந்த ஆளுமை தற்போது இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது.
வெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்?
ரஜினி
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு மக்கள் மத்தியில் பலமாக இருப்பது திமுக. அதேசமயம், அதிமுகவும் இன்னும் வீழ்ந்து விடவில்லை. இந்த இரண்டையும் பாஜக விரும்பவில்லை. காரணம் ரஜினியை புரமோட் செய்ய வேண்டும்.. அதே சமயம், திமுகவையும் தாண்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்ற வேகத்தில் பாஜக உள்ளது.
பெரிய பலம்
தனக்கு தடையாக உள்ள திராவிடத்தை வேரறுக்க பாஜக எத்தனை விதமான வழிகள் உள்ளதோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்து பல காலமாகி விட்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது (நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ.. இதுதான் உண்மை). முதல் பெரிய பலமான அதிமுகவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட பாஜக, தன்னை மீறி அதிமுக எதுவும் செய்யாமல் கவனமாக விரல் நுனியில் வைத்து ஆட்டம் காட்டி வருகிறது.
திமுக
அடுத்து திமுகவை பலவீனப்படுத்த அது கடுமையாக முயன்று வருகிறது. ஏடாகூடமான விவகாரங்களில் சிக்கியுள்ள திமுக முக்கியஸ்தர்களின் பட்டியலை தட்டி எடுத்து தற்போது கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்ட ஆரம்பித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் திமுக கூட்டணியை உடைக்கும் வேலைகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
துரைமுருகன்
இந்த நிலையில்தான் தேவையில்லாமல் கே.எஸ். அழகிரி வாயை விட, அது திமுகவை கொதிக்க வைத்து விட்டது. அழகிரியின் பேச்சால் கடுப்பாகிப் போன திமுக, காங்கிரஸை தூக்கி எறியும் முடிவுக்கே வந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப துரைமுருகனும், டிஆர் பாலுவும் பேசிய பேச்சுக்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தின.
திருவிளையாடல்
இந்த நிலையில் உள்ளே புகுந்த கமல்ஹாசன்.. அதான் நான் அன்னிக்கே சொன்னேனே.. இவங்க பிரிஞ்சுருவாங்கன்னு" கொளுத்திப் போட.. ஆஹா.. என்னமோ நடக்கப் போகிறது என்ற பரபரப்பு கூடிக் கொண்டது. இங்குதான் பாஜகவின் திருவிளையாடல் ஏதேனும் இதில் இருக்கிறதோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
அறிக்கை
ஆனால் திமுக - காங்கிரஸ் மோதல் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டது, அவர்களாகவே அடித்துக் கொள்கிறார்கள் என்றுதான் நம்பப்படுகிறது. காரணம் அடிமட்ட திமுக தரப்பு தொடர்ந்து தங்களை அவமானப்படுத்தியதால் கொதிப்படைந்துதான் அழகிரி அப்படி ஒரு அறிக்கையை விட்டார் என்று காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. ஆனால் அது திமுக மேலிடத்தை சீண்டி விட்டதால் அவர்கள் எதிர் வினையாற்றி விட்டனர். இதுதான் சிக்கலாகி விட்டது.
மக்கள் நீதி மய்யம்
எது நடந்ததோ.. என்ன நடக்கப் போகிறதோ.. ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அதை வைத்து பல காரியங்களைச் செய்ய பாஜகவும், மக்கள் நீதி மய்யமும் ஆவலாக காத்துள்ளன. அப்படி நடந்தால் அது திமுகவுக்குப் பெரும் பாதகமாகவே அமையும் என்பதை காங்கிரஸை விட திமுகவினர்தான் முதலில் தெளிவாக உணர வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
எதிர்காலம்
ஆள் இல்லை, எனவே மக்கள் ஆதரவு நமக்கு மட்டுமே என்ற மிதப்பு எந்தக் காலத்திலும் திமுகவுக்கு வந்து விடக் கூடாது. வலுவான கூட்டணிதான் இத்தனை காலமாக திமுகவை கரையேற்றி வந்துள்ளது. தனியாக நின்றால் நிச்சயம் திமுக தேறாது என்பதே எதார்த்தம் என்றும் அரசியல் அறிந்தோர் சொல்கிறார்கள். இதை உணர்ந்துதான் திமுக இதுகாலம் வரை கூட்டணியோடு மட்டுமே ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வந்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். எனவே இதை உணர்ந்து காங்கிரஸை வெளியேற்றாமல் அரவணைத்தால் அது திமுகவுக்குத்தான் நல்லது என்பதும் அவர்களின் கருத்தாகும்.
பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்பதை.