தமிழகத்தில் எடுபடுமா இரட்டை தலைமை...? தெரிந்துதான் பேசினாரா ரஜினி..?
சென்னை: கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது தமிழகத்தில் வெற்றியடையாத ஒரு பார்முலாவாகும்.
Recommended Video
இரட்டை தலைமை என்பது பொதுவாக கட்சியிலும், ஆட்சியிலும் கடும் குழப்பங்களை தான் ஏற்படுத்தும். தொண்டர்களும், நிர்வாகிகளும் யார் பக்கம் நிற்பது, யார் பேச்சை கேட்பது என தடுமாறக்கூடும்.
ஆட்சியில் இருக்கும் தலைமைக்கு ஒத்துழைக்காவிட்டால் அரசு மூலம் எந்த பயனும் அடையமுடியாது என்பதால், கட்சி தலைமையை காட்டிலும் ஆட்சி தலைமையின் பக்கமே நிர்வாகிகள் சாய வேண்டியது வரும்.
அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு.. ரஜினி
ரஜினி பேச்சு
நேற்று முதல் ரஜினி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார், கட்சி பெயரை அறிவிக்கிறார் என பயங்கரமாக பில்ட்-அப்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று ரஜினி செய்தியாளர்கள் மத்தியில் பேசியது அவரது ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முதல்வர் பதவியை கனவிலும் நினைத்து பார்த்ததில்லை எனக் கூறி அந்தப் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் பின்வாங்கியது தான். கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ரஜினி கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்றால் அது சந்தேகமே.
மாநிலக் கட்சிகள்
ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க வேண்டும், இரண்டு வாள்கள் ஒரு உறையில் என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத ஒன்று. அரசியலை பொறுத்தவரை ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்ற நடைமுறை தேசியக் கட்சிகளில் மட்டுமே உள்ளன. அண்மைக்கால அதிமுகவை தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளிலும் இது போன்ற இரட்டை தலைமைகள் இருப்பதாக தெரியவில்லை. இதனிடையே இரட்டை தலைமை இருப்பதால் இன்று அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அடையும் குழப்பங்கள் ஏராளம்.
நம்பிக்கை
தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளில் ரஜினி கூறிய இரட்டை தலைமை என்ற சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. நரசிம்மராவ் காலத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சோனியா இருந்தாலும் இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தும் ஆட்சிக்கு வேறு ஒரு தலைமையை (மன் மோகன் சிங்கை) கொண்டு வந்தார். இதேபோல் தான் பாஜகவிலும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற முறை பின்பற்றப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்படித்தான். ஆனால் இந்த பார்முலா மாநிலக் கட்சிகளில் இருந்தால் நித்தம் ஒரு பூகம்பம் தான் வெடிக்கும்.
அறியாமை
பொதுவாக அரசியலை பொறுத்தவரை இரட்டை தலைமைகள் இருந்தால் அவர்களுக்குள் பனிப்போர் நிச்சயம் நடைபெறும். இதில் யாரும் விதிவிலக்கல்ல. அந்த பனிப்போர் கண்ணெதிரே தெரியாவிட்டாலும் கட்சியையும், ஆட்சியையும் நாளுக்கு நாள் கரைத்துவிடும். இதன் பாதிப்பு தேர்தல்களின் போது தான் எதிரொலிக்கும். மேலும், தொண்டர்கள் கட்டுப்பாடு சிதையும், கோஷ்டி பூசலுக்கு வழி வகுக்கும், யார் பெரியவர் என்ற போட்டியை உருவாக்கும், இப்படி பல பாதகங்கள் இரட்டை தலைமையால் ஏற்படக் கூடும். ஆனால் இவற்றையெல்லாம் அறிந்து தான் இரட்டை தலைமை என்ற பார்முலாவை ரஜினி கையில் எடுத்திருகிறாரா எனத் தெரியவில்லை.