டோட்டலா மாறுதே.. "மோடியா லேடியா" என்றார் ஜெயலலிதா.. இப்ப "மோடியா, எடப்பாடியா" என்கிறாரா பழனிச்சாமி?
அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக இடம்பெற போகிறதா இல்லையா என்று தெரியவில்லை
சென்னை: வரும் எம்பி தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற போகிறதா? இல்லையா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பும், வலுவான சந்தேகம் தமிழக அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. மோடியா லேடியா என்று ஜெயலலிதா கேட்ட பாணியில், மோடியா, எடப்பாடியா? என்ற ரீதியில் பழனிச்சாமியின் அரசியல் நகர்வதாக சொல்கிறார்கள்.
வரும் எம்பி தேர்தலை பொறுத்தவரை அதிமுகவைவிட, பாஜகவுக்கு மிக முக்கியமானது.. எப்படியாது 15 சீட்டுக்களை பெற்றுவிடுவது என்ற முனைப்புடன் களமிறங்கி வருகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. 95 சதவீதம் நிர்வாகிகள் தன்னிடம் உள்ளதால், தன்னை கட்சி தலைமையாக அங்கீகரிக்கும்படி கூறுகிறார்.
பாஜக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதில் கொடுக்கப்படும்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை!
ஓபிஎஸ் ஜெர்க்
இப்படிப்பட்ட சூழலில்தான், நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டம் பாஜகவுக்கு ஒரு ஜெர்க்கை தந்தது.. "எக்காரணம் கொண்டும் ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்து கொள்ள முடியாது என்று கூறியதுன், அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.. ஓபிஎஸ் தனியாக பிரிந்து கிடக்க, தேமுதிக, பாமகவும் கூட்டணியில் விலகி கிடக்க, பாஜகவும் முரண்பட்டு நிற்க, கூட்டணியில் ஒருத்தருமே இல்லாமல் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி இவ்வாறு அறிவிக்க காரணங்கள் இல்லாமல் இல்லை..
எல்.முருகன்
ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளதே, பாஜகவுக்கான பதிலடியாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, "முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தை பாஜக மேலிடம் முடிவு செய்யும்" என்று, மூத்த தலைவர்கள் எல்.முருகன் முதல் வானதி சீனிவாசன் வரை செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.. அந்த அளவுக்கு பாஜக தலைமையை கலந்தாலோசித்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ய வேண்டும் என்றே எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், திடுதிப்பென்று அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று எடப்பாடி சொல்லிவிடவும், டெல்லி வரை பறந்ததாம் விஷயம்.
ஏசி சண்முகம்
கடந்த வாரம்கூட, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.. இதுவும் பாஜகவுக்கு கடுப்பை தந்தது.. "அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்பேன் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, தங்களுடன் கலந்தாலோசிக்காமல், தமாகாவுடன் மட்டும் ஆலோசனை நடத்திவிட்டு, களத்தில் போட்டியிட போவதாக அறிவித்ததையும் தமிழக பாஜகவில் உள்ள சில சீனியர்களே எதிர்பார்க்கவேயில்லையாம்..
பூஜை ஜெகன்
அதுமட்டுமல்ல, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு, கமலாலயத்துக்கு கட்சி தலைவர்கள் சென்றிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் அங்கு செல்லவில்லை.. எடப்பாடி நேரில் வராமல், நிர்வாகிகளை அனுப்பி வைத்து ஆதரவு கேட்டதையும், பாஜக சீனியர்கள் கவனிக்காமல் இல்லை. இன்றைய தினம், இன்னொரு அதிர்ச்சியை பாஜகவுக்கு எடப்பாடி தந்துள்ளார்.. இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் பணிமனை (அலுவலகம்) திறக்கப்பட்டுள்ளது.. அந்த பதாகையில் பாஜக தலைவர்களின் போட்டோக்கள் இடம்பெறவில்லை.. ஆனால், கூட்டணியில் இருக்கும் ஜிகே வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, கிருஷ்ணசாமி படங்கள் இடம்பெற்றுள்ளன...
ஜான்பாண்டியன்
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிலேயே பதாகை வைத்திருந்தும், பாஜக தலைவர்களின் போட்டோக்கள் இடம்பெறவில்லை.. அதைவிட முக்கியமாக, பாஜகவின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என்று சொன்ன ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரின் போட்டோக்களும் இடம்பெறவில்லை.அதிமுக - பாஜக இடையேயான அதிருப்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்க போவதே இந்த பதாகைதான் என்றும் பேசப்பட்டு வருகிறது..
கூட்டணி பேரம்
ஆகமொத்தம், பாஜகவை எதிர்ப்பதற்கான இறுதி மனநிலைமைக்கே எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டதாக தெரிகிறது.. கூட்டணியாகட்டும், சீட் விவகாரங்கள் ஆகட்டும், தொகுதியாகட்டும், கூட்டணி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும், அதை தன்னிச்சையாக எடுப்பதுதான் ஜெயலலிதாவின் பாணி.. கூட்டணி கணக்கு, பேரம் பேசுவது, என எதுவுமே ஜெயலலிதாவிடம் எடுபடாது.. அதற்கேற்றவாறு, அவர் ஒதுக்கும் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில்தான் கூட்டணி கட்சிகளும் இருந்தன.. கிட்டத்தட்ட அதே ரூட்டைதான் எடப்பாடி எடுத்துள்ளதாக தெரிகிறது.
சதிகாரர்கள்
நம் ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி, ஒவ்வொரு முறை பேட்டிகள் தரும்போது, எடப்பாடி குறித்து பேசும்போதெல்லாம் தவறாமல் சொல்வது, "எடப்பாடி தன்னை ஒரு ஜெயலலிதாவே கற்பனை செய்து கொண்டிருக்கிறார்" என்பதுதான்.. அன்று நடந்த நாமக்கல் கூட்டத்தில், ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பகிரங்கமாகவே எடப்பாடி பேசியிருந்தார். தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டபடியே பேசினாராம்.. "அம்மா இருந்தபோது, சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். அப்படித்தான் இப்போதும், வழக்குகள் தொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
"மோடியா? லேடியா"
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸை கட்சியில் நீக்கியதே, பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவதற்காகத்தான் என்றும் சொல்கிறார்கள்.. தன்னுடைய ஒவ்வொரு அரசியல் நகர்விலும் ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் "மோடியா? லேடியா" என ஜெயலலிதா கேட்டது போல, இப்போது "மோடியா? எடப்பாடியா?" என பேசும் அளவுக்கு எடப்பாடியின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்...
நகரும் புள்ளி
இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், எடப்பாடியின் இந்த செயல்பாடுகள், தமிழக பாஜகவில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், டெல்லி சென்றுள்ளார் அண்ணாமலை.. எத்தகைய அதிர்வுகள் அதிமுக கூட்டணிக்குள் நடக்க போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும்.. எனினும், மோடியா? எடப்பாடியா? என்ற புள்ளியை நோக்கி நகர்கிறதாம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல்..!