குட்கா தடை நீக்கம்! இப்போ குட்கா விற்கலாமா.. கூடாதா? வந்து விழுந்த கேள்வி! அமைச்சர் மா.சு பரபர பதில்
குட்கா விற்பனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை: குட்கா விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியிருந்தது. இதனிடையே கடைகளில் குட்கா விற்பனை செய்யலாமா என்பதில் குழப்பம் இருந்து நிலவிய நிலையில், இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாட்டில் உத்தரவிடப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பான ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் பிறப்பிக்கப்படும். இதில் விதிகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து.. தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன! அமைச்சர் மா.சு பரபர
குட்கா தடை
இதனிடையே குட்கா தடை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிமன்றம் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாகக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் தடையை நீக்கியும் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடைகளில் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யலாமா கூடாதா என்பதில் குழப்பம் இருந்து வந்தது.
கோரிக்கை
இது தொடர்பாக அரசு சீக்கிரம் தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கியை அணிவித்தார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாநில அரசு கொண்டு வந்த 7.5% இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பலன் பெற்று வருகிறார்கள். கோவையில் மருத்துவத் துறையில் புதிய கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக மருத்துவமனைகள் உள்ளன.
புதிய மருத்துவமனைகள்
டெல்லியில் உள்ள திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற போது, அங்குள்ள மருத்துவமனையைப் பார்வையிட்டார். இதுபோன்ற கட்டமைப்பில் ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்பதால் அதேபோன்ற ஒரு கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி மாநிலம் முழுக்க 708 மருத்துவமனைகள் கட்ட முதல்வர் உத்தரவிட்டார்.. இந்த புதிய மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளர் இருப்பார்கள்.
கோவை
கோவை மாவட்டத்திற்கு அதிகபட்சமாக 72 மருத்துவமனைகளை ஒதுக்கி உள்ளோம். மாநகர் பகுதிகளுக்கு மட்டும் 64 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. வரும் பிப். 6ஆம் தேதி மாநிலத்தில் முதல்முறையாக இந்த 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் புறநோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் திட்டத்தில் இஎஸ்ஐ-க்கு பல உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் திட்டம்
மேலும், விபத்தில் சிக்கியவர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கியுள்ளோம். அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்கத் தொகையை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 1.41 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு 125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை விரைவில் நிரப்பவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
குட்கா விவகாரம்
குட்கா தடை நீக்கம் குறித்துப் பேசிய அவர், "குட்கா தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும், மாநில அரசு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தை வைத்துள்ளது. எனவே, உணவுப் பொருட்களை விற்கும் மளிகைக் கடைகளில் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குட்காவை விற்க வேண்டாம் என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு நான் கோரிக்கையாகவே கேட்கிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படும். அவர்கள் சட்டத்தில் இருக்கும் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியுள்ளனர். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தேவைப்பட்டால் சட்டத்திருத்தம் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.