ராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்!
Recommended Video
சென்னை: சிவகங்கை தொகுதியில் தோல்வி அடைந்தாலும் கூட எச். ராஜாவை ராஜ்யசபா மூலம் எம்பியாக்கி, மத்திய அமைச்சர் பதவியிலும் அவரை அமர வைக்க பாஜக திட்டமிடுவதாக ஒரு பரபரப்புத் தகவல் உலா வருகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக பெற்ற இடங்களை விட இது 21 தொகுதிகள் அதிகம். ஆக இம்முறை பாஜக மிருகபலத்தோடு ஆட்சியில் அமரவுள்ளது.
வரும் 30 ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதோடு இப்போது இருக்கின்ற அமைச்சரவையில் பலரது இலாக்காக்கள் மாற்றப்படும். அதோடு புதியவர்கள் பலருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு நிதித்துறை அல்லது உள்துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் தமிழகத்திற்கும் ஒரு சில அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சின் மகன் ரவீந்தரநாத் குமார் அமைச்ச்சர் ஆக்கப்படலாம் என்றும் பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்!
இந்தியா முழுவதும் பாஜக பெருவெற்றியை பெற்றிருந்தாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவால் நுழையவே முடியாத நிலை உள்ளது. அதிலும் இம்முறை பாஜகவுக்கு இருந்த ஒரு தொகுதியும் பறிபோனது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவை வேரூன்ற செய்யும் வகையில் தமிழகத்திற்கு ஒரு பாஜக அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு தகுந்த நபராக எச் ராஜா இருப்பார் என பாஜக தலைமை கருதுகிறதாம். இதனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்று மாலை பாஜக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள சூழலில் எச் ராஜா டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்காக எச் ராஜா நேற்றே டெல்லி சென்றுவிட்டார். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியைத் தழுவிய எச்.ராஜா மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இம் முறை பாஜக ஆட்சி அமைத்தால், நான் ஜெயித்தால் வனம் மற்றும் சுற்று சூழல் துறை அமைச்சர்ஆவது உறுதி’ என்று தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் நேற்று டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இது அவர் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அவர் அமைச்சர் ஆக வேண்டுமென்றால் மாநிலங்களவைக்கு அவர் தேர்வு செய்யப்படவேண்டும். அதனால் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவுடன் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.