என்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்!
Recommended Video
சென்னை: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் பொது மொழி தேவை என்ற கருத்தை உதிர்த்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அதுமட்டுமா.. 'துரதிருஷ்டவசமாக' இந்தியாவில் அதுபோன்ற ஒரு நிலைமை உருவாக வாய்ப்பு இல்லை என்றும் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
'துரதிருஷ்டவசமாக..' என்று அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தைதான் இன்று சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இந்தியை பொது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திய நிலையில், அப்படி ஒரு நிலை இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று ரஜினிகாந்த் வழிமொழிந்துள்ளார்.
இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா!
எதில் உள்ளது மகிழ்ச்சி
வேற்றுமையில் ஒற்றுமை என்பதும், பல்வேறு கலாச்சாரங்களும், மொழிகளும் கொண்ட ஒரு வண்ணமயமான நாடு என்பதில் தான், இந்தியா இதுவரை பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனியும் பெருமைப்பட போகிறது. இதில் எங்கே இருந்து வந்தது துரதிருஷ்டம் என்பது புரியவில்லை. அதை ரஜினிகாந்தும் தெளிவாக விளக்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஒரு பொது மொழி, அதுவும் இந்தி மொழி அவசியமா என்று கேட்டால் சுத்தமாக அவசியம் இல்லை என்பதுதான் கள நிலவரம். எப்படி என்று பார்ப்போமா?
கலாச்சார காவலர்கள் எங்கே
பாஜக இந்த நாட்டின் வளமான கலாச்சாரத்தின் மீதும், பண்பாடு மீதும் மிகவும் மரியாதை வைத்திருப்பதாக வெளிப்படையாக காண்பித்துக் கொள்ள கூடிய கட்சியினர். அப்படி என்றால், தொன்மையான தமிழ் கலாச்சாரம், மலையாள கலாச்சாரம், கன்னட கலாச்சாரம் உள்ளிட்ட நாட்டின் வேறுபட்ட கலாச்சாரங்கள் மீதும் அந்த கட்சி, நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமே தவிர, அவற்றை அழித்து, ஒடுக்குவது ஒற்றுமைக்கு பலம் தராது.
ஏற்கனவே ஒற்றுமையாகத்தானே இருக்கிறோம்
தேசத்தை ஒருங்கிணைக்க பொதுமொழி அவசியம் என்கிறார் அமித் ஷா. ஆமாம் என்கிறார் ரஜினிகாந்த். ஆனால், அதற்கான தேவை என்ன வந்தது? இந்த தேசம் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. ஒன்று, இரண்டு வருடங்களாக கூட கிடையாது, கடந்த 70 வருடங்களாக இந்தியர்கள் என்ற ஒருமைப்பாட்டுடன், பெருமிதத்தோடு வாழ்ந்து வருபவர்கள்.
இந்தி பேசும் மாநிலங்கள் சாதித்தது என்ன?
இந்திதான் நாட்டின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என்று, முன் வைக்கும் வாதமும், நம் கண் முன்னே காணும் புள்ளிவிவரங்களால் முற்றிலுமாக அடிபட்டுப் போகிறது. இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் காணப்படும், சமூக, பொருளாதார நிலை, இந்தி பேசாத, பல மொழி கலாச்சாரம் கொண்ட தென் இந்தியாவை விடவும் மிகக் கீழே உள்ளது. ஒற்றை மொழி, வடமாநில மக்களுக்காக செய்த நன்மைதான் என்ன? எதுவும் செய்யவில்லை என்பதுதானே உண்மை.
என்ன தகுதியில் பொதுமொழி?
அதுமட்டுமின்றி, பொது மொழியாக இந்தியை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்த மொழிக்கு தமிழைப் போன்ற செம்மொழித் தகுதி உள்ளதா? அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழிதானா அது? இலக்கிய, வரலாற்று செழுமை உள்ளதா? தகுதி அடிப்படையில், தன்னிகரில்லாத, தமிழ் மொழியின் பக்கத்தில்கூட அந்த மொழியால் நிற்கத்தான் முடியுமா? அப்படியான ஒரு மொழியை பொது மொழியாக, தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன?
யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்
இந்தி அவசியப்படும் இடங்களில் தாமாக முன்வந்து அதைக் கற்றுக்கொள்வது தமிழர்கள் வழக்கம். டெல்லியில் நீண்டகாலமாக வசிக்கக்கூடிய ஒரு தமிழர் கண்டிப்பாக இந்தியை அவராகவே விரும்பி கற்பார். கேரளாவில் வசிப்பவர் மலையாளம் கற்பார். இதேபோலத்தான் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவரவர் தங்களுக்கு பிடித்த மொழிகளை கற்றுக்கொள்ள கூடிய சுதந்திரம் இங்கு ஏற்கனவே உள்ளது.
ஆங்கிலம் அவசியம்
ஒரியா மொழியை, பெங்களூரில் இருந்து கொண்டே ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். யாரும் அதை தடுக்க போவது கிடையாது. ஆனால் இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடும். குடிசைகளில் வாழக்கூடிய மக்களும் கூட, ஆங்கில மொழி கல்வியில் தங்கள் குழந்தை கல்வி கற்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் என்பதுதானே யதார்த்தம். வட இந்தியாவிலும் கூட இந்த நிலை தான் உள்ளது. இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் கூட, இந்தி வழி கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து, ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளிகளின், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இந்த நாட்டுக்கு உணர்த்தக் கூடியது என்ன? ஆங்கிலத்தின் அவசியத்தைதானே அவை உணர்த்துகிறது? மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்தைதானே அது உணர்த்துகிறது!
வட்டார மொழிகள்
தென்னிந்தியாவில் கல்வித்தரம் அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், இங்கே தாய்மொழி கல்வியுடன் ஆங்கிலமும், கற்றுத் தரப்படுகிறது. வட இந்தியாவைப் பொறுத்த அளவில் பல்வேறு வட்டார மொழிகள் ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு இந்தி மூலமாக கல்வி கற்று தரப்படுவதால், வட்டார மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட பலரும் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
ஆனால், 'அதிர்ஷ்டவசமாகத்தான்' தென்னிந்தியாவில் அப்படி ஒரு நிலை இதுவரை ஏற்படவில்லை. அது, டெல்லியாகவே இருந்தாலும், ஆங்கிலம் தெரியாமல் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருவரால் பணிக்கு சேர்ந்திட முடியுமா? உலகத்தோடு ஒத்து வாழ்வதற்கு ஆங்கில மொழி இருக்கும் போது, நமக்குள் பேசிக் கொள்வதற்கு மட்டும் ஒரு பொது மொழி தேவையா?
அறிஞர் அண்ணா கூறியதை போல, பெரிய நாய் செல்வதற்கு பெரிதாக ஒரு வாசல் இருக்கும் போது, சிறிய நாய் செல்வதற்கு சிறிதாக எதற்கு மற்றொரு வாசல் உருவாக்கப்படவேண்டும்? பெரிய நாய் செல்லக்கூடிய வாசல் வழியாகவே இந்த குட்டி நாய் செல்லலாம்தானே!