தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா.. ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் நடமாடும் கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து நாளை அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சாலைகளில் வசிக்கும் வீடில்லா மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சை வழங்கவும் தனிக் குழு ஒன்றை அமைக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆன்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் தாக்கத்தில் இருந்து, சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 2 ஆயிரத்து 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எளிதில் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக, பரிசோதனைக் கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, மனுவுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, வழக்கு விசாரணையை மே 6 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை இருப்பில் உள்ளன? கூடுதல் பரிசோதனைக் கருவிகள் வாங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.