இன்னும் 3 நாளில் கொரோனா பிரச்சினை காலி.. முதல்வர் கூறியபடி நடக்குமா?
சென்னை: இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும், என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாக புதிதாக சேரக்கூடிய, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைவை, மனதில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் மிகவும் முன்கூட்டியே முதல்வர் எடப்பாடி இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டாரா, என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
கொரோனா.. நேற்று 62 பேர் குணமடைந்தனர்.. சேலத்தில் 7 பேர் டிஸ்சார்ஜ்.. முதல்வர் பழனிசாமி ஹேப்பி நியூஸ்
கர்நாடகா உதாரணம்
இதற்கு உதாரணமாக அண்டை மாநிலமான கர்நாடகாவை கூட எடுத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் ஓரளவு அதிகமாகவும், பிறகு கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது நோயாளிகள் எண்ணிக்கை. ஆனால் நேற்று, அதாவது இத்தனை நாள் லாக்டவுன் காலகட்டத்திற்குப் பிறகு திடீரென 36 பேருக்கு ஒரே நாளில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை பதிவான ஒரே நாள் நோயாளிகள் எண்ணிக்கை விகிதத்தில் இது அதிகம்.
கணிக்க முடியாது
இதுதான் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் பின்விளைவுகளாக பார்க்கப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஒரு டாக்டர் ஆவார். அவர் இப்படித்தான் ஒருநாள் பேட்டியின்போது தமிழகத்தில், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், யாருமே சீரியஸ் என்ற நிலைமையில் இல்லை. வென்டிலேட்டர் உதவி தேவையில்லை, என்று தெரிவித்தார். பேட்டியளித்த அடுத்தநாளே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதன் பிறகு பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில், இந்த வைரஸ் புதிது என்பதால், நம்மால் கணிக்க முடியவில்லை. நோயாளிகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். திடீரென அவர்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இதுபோன்று ஏற்பட்டுவிட்டது, என்று உலகளாவிய எதார்த்தத்தை ஒப்புக்கொண்டார்.
கேரளா நிலவரம்
கொரோனா வைரஸ் பரவல் என்பது நேற்று முன்தினம் கேரளாவில் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு இருந்தது. அதாவது, புதிய நோயாளிகள் யாரும் கண்டறிய படவில்லை. ஆனால் நேற்று மறுபடியும் சில நோயாளிகள் அங்கு கண்டறியப்பட்டனர். அப்படி இருக்கும்போது முதல்வர் எப்படி மூன்று நாட்களில் முழுமையாக வைரஸ் பிரச்சினை சரியாகிவிடும் என்று கூறினார் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை பூஜ்யம் என்ற நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக நாட்களில் புதிதாக நோயாளிகள் கண்டறியப்பட மாட்டார்கள் என்பதற்கு நிச்சயம் கிடையாது. ஏனெனில் தமிழகத்தில் அனைவருக்குமான பரிசோதனைகளை செய்யவில்லை. அறிகுறி வந்தவர்களுக்கு மட்டும்தான் பரிசோதனைகள் செய்துள்ளார்கள். இதை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் இப்போதே வருவது என்பது இயலாத காரியம்.
ஸ்டாலின் விமர்சனம்
ஆனால் எதிர்க்கட்சிகள், இன்னொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரகப் பகுதிகளில் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தி ஒரு சில நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு மக்களை தயார்படுத்தும் நோக்கத்தில்தான், மூன்று நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது என்று எதிர்க்கட்சி நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைக் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே போய், முதல்வர் என்ன மாய மந்திரக் கோலா கையில் வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சினை சரியாகி விட்டது என்று கூறுகிறாரே, என்று வினவியுள்ளார்.
தைரியம்
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை என்பது கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது என்பதற்காக தைரியமூட்டும் சொற்களை முதல்வர் சொல்லி இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக முழுமையாக மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வைரஸ் பாதிப்பு ஒழிந்துவிடுமா என்பதை ஆய்வாளர்கள் தான் சொல்ல முடியும். எனவே, பொதுமக்கள் முதல்வர் கூறிய ஆறுதல் வார்த்தைகளை ஒரு மகிழ்ச்சிக்கான குறியீடு என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு, வீடுகளுக்குள் இருப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.