ஆபாசத்துக்கு மாறி வரும் பாசக்கார அரசியல்வாதிகள்!
-ஆர். மணி
சென்னை: இன்று ரொம்பவே குதிக்கிறார்கள் சில அதி மேதாவி அரசியல்வாதிகள். என்ன காரணம் என்று கேட்டால் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள், குறிப்பாக, முக்கியமான கட்சிகளான ஆளும் அஇஅதிமுக வும், பிரதான எதிர்கட்சியான திமுக வும் மேடைகளில் ஆபாசமாக பேசுகிறார்களாம். அதனை கட்டுப்படுத்த வேண்டுமாம், அப்படியும் மீறி ஆபாச பேச்சுக்களை பேசுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
இப்படி குதித்து குத்தாட்டம் போடுபவர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. நாட்கணக்கில் இப்படி பேசுபவர்கள், தனி மனித தாக்குதலை தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு பொது வெளியில் வந்து மீண்டும், மீண்டும், பேசுபவர்கள் குறித்து யாராவது கண்டனம் தெரிவித்தாலோ அல்லது ஆபாச பேச்சுக்களின் சொந்தக்காரர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலோ எந்த பலனும் இல்லை. காரணம், சம்மந்தப்பட்டவர்கள், இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழக பிரதிநிதிகள் என்பதை தவிர வேறெதுவும் கிடையாது.
ஆனால் இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழக பிரதிநிதிகளை தவிர்த்து, வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆபாசமாக பேசினால் அவர்கள் மீது வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் பாய்கின்றன. திருநெல்வேலியில் ஓராண்டுக்கு முன்பு கடன் தொல்லை தாங்காமல், கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டிக் கொண்ட ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் அவருடைய மனைவியுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, குடும்பத்துடன் தீக்குளித்து மாண்டு போனார். அதனை ஒரு கார்ட்டூனாக போட்ட காரணத்திற்காக, கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். அவர் தீட்டிய அந்த கார்ட்டூன் முதலமைச்சரையும், கலெக்டரையும், போலீசையும் ஆபாசமாக சித்தரிததாம். உச்ச நீதிமன்றம் எத்தனையோ தடவைகள் இத்தைகய கைது நடவடிக்கைகள் முற்றிலும் சட்ட விரோதமானவை, இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொர் குடிமகனுக்கும் கொடுத்திருக்கும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இந்த நடவடிக்கைகள் என்று சொல்லிய பிறகும் கைது நடவடிக்கைகள் தொடர்வதுதான் முக்கியமாக கவனிக்கத்தக்கது.
[ஒரு நொடியே வாழ்ந்தாலும் கோடி மின்னலாய் மின்ன வேண்டும்.. மறக்க முடியாத பரிதி]
சமீபத்தில், தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. எம்எல்ஏ கருணாஸ் மீதான நடவடிக்கைகளும், பாஜக தேசீய செயலாளர் எச்.ராஜா, நீதி துறை குறித்தும், போலீசையும் கடுமையாக விமர்சித்த விவகாரமும் இதில் வருகிறது. கருணாஸ். ஒரு குறிப்பிட்ட அதிகாரியை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சரையும், போலீசையும் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்தார் என்று குற்றம் சாட்டி போலீஸ் கருணாசை கைது செய்தது. கருணாஸை போலீஸ் கஸ்டடி (போலீஸ் காவலில் வைத்து ஏழு நாட்கள் விசாரிக்க கோரி) போலீஸ் மனு தாக்கல் செய்தது. இதனை சம்மந்தபட்ட மாஜிஸ்டிரேட் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்து விட்டார். பின்னர் கருணாஸ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மற்றோர் நிகழ்வு, பாஜக வின் தேசீய செயலாளர் எச். ராஜா விவகாரம். பிள்ளையார் ஊர்வலத்தை குறிப்பிட்ட பாதையில் தான் கொண்டு போவோம் என்று சில ஹிந்து அமைப்புகள் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த ராஜா, தாங்கள் விரும்பும் பாதையில் தான் போவோம் என்று கூறுகிறார். அதற்கு அனுமதி மறுக்கும் போலீஸ், அந்த குறிப்பிட்ட இடத்தில் கூட்டங் கூட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. மீறி நடத்தினால் நீதி மன்ற அவமதிப்பு வரும் என்று கூறுகிறது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் ராஜா, நீதி துறையையும், போலீசையும் கடுமையாக விமர்சிக்கிறார். இதற்கு பெருங் கண்டனம் சமூகத்தின் பல தளங்களில் இருந்தும் வந்தவுடன், 'அந்த பேச்சு நான் பேசிய பேச்சல்ல. அந்த வீடியோவில் ஒலிப்பது என் குரல் அல்ல, அது வேறு ஒருவருடைய குரல்’ என்கிறார். ராஜா சொல்லுவது உண்மை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்ளுவோம். அப்படி யென்றால் ராஜா என்ன செய்திருக்க வேண்டும், அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்க வேண்டும். அந்த டேப் உடனடியாக தடயவியல் மையத்திருக்கு கொண்டு போகப்பட்டிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் அந்த குரல் ராஜா வின் குரலா இல்லையா என்பது அதில் தெரிய வந்திருக்கும். ஆனால் ராஜா அப்படி எதுவும் முறையாக போலீசில் புகார் சொல்லவில்லை.
இந்த பின்புலத்தில் பார்த்தால்தான், தமிழகத்தில் அரசியல் வாதிகளின் ஆபாச பேச்சுக்கள் அதிகரித்து விட்டன என்று புலம்புபவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக, தமிழ் நாட்டை மாறி, மாறி ஆண்ட திமுக வும், அஇஅதிமுக வும் ஆபாச மேடை பேச்சைகளை அனுமதித்தன. இவை எல்லாம அரசியல் கூட்டங்களில் பேசப்பட்ட ஆபாச பேச்சுக்கள் தான். பின்னர் புதிது, புதிதாக வந்த கட்சிகளும் ஆபாச பேச்சுக்களை ஒரு கலையாகவே வளர்த்து எடுத்தனர். ஆனால் ஆபாச பேச்சுக்களுக்கும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்க பேசப்படும் பேச்சுக்களுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. திமுக, அஇஅதிமுக மற்றும் இன்ன பிற கட்சிகள் ஆபாச பேச்சுகளைத்தான் பேசினார்களே தவிர, இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதலை உருவாக்க ஒரு போதும் பேசியதில்லை. ஆனால் எச்.ராஜா வும், அவரது சித்தாந்தத்தினை ஏற்றுக் கொண்டவர்களும் பேசும் பேச்சுக்கள் இரு சமூகங்களுக்கும் இடையே மோதலை உருவாக்க திரும்ப, திரும்ப பேசப்பட்ட பேச்சுக்கள்தான்.
இதனை உணர ஒருவர் விஞ்ஞானி யாக இருக்க வேண்டியதில்லை. கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து வைத்திருப்பவர்களும், அடிப்படை அறிவுள்ளவர்களும் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விவகாரம் தான் இது. இந்த பின்புலத்தில் பார்த்தால் தான் தற்போது தமிழகத்தில், பொது வெளியில் ஆபாச பேச்சுக்கள் பெருகி விட்டன என்பவர்களின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வரும்.