சார்.. நான் உசுரோடதான் இருக்கேன்.. இறந்தது என் தம்பி.. ஜன்னல் பஜ்ஜிக் கடை உரிமையாளர் பரபர தகவல்!
சென்னை: நெல்லையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் ,மயிலாப்பூரில் இருக்கும் பிரபல ஜன்னல் பஜ்ஜிக் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அந்த செய்தி தவறு என்பது தெரிய வந்துள்ளது. அவரது சகோதரர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதை தவறாக செய்தி வெளியிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மயிலாப்பூரில் பஜ்ஜிக் கடை நடத்தி வருபவர் சந்திரசேகரன் . பொன்னம்பலம் வாத்தியார் தெருவில் இருக்கும் தனது வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து, அதன் வழியாக பஜ்ஜி விற்று வருகிறார். இவரது கடையில் விற்கப்படும் பஜ்ஜி, போண்டா, மிளகாய் வடை, வடை, சாம்பார், இட்லி, பொங்கல், இட்லி, கல் தோசை ஆகியவை மிகவும் பிரபலம். இவரது கடை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமும் பிரபலம். கபாலீஸ்வரர் கோயில் அருகேதான் இந்தக் கடை உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் சந்திரசேகரன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் மிகவும் அன்புடன், நட்புடன் பழகும் சந்திரசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவரை எளிதில் மறந்துவிட முடியாது, 30 ஆண்டுகள் பஜ்ஜிக் கடை நடத்தி வந்து இருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து தான் இறக்கவில்லை என்றும் இறந்தது தனது சகோதரர் சிவராம கிருஷ்ணன் என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டையில் இருக்கும் மத்திய கணக்காயர் அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் தனது அலுவல் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் காலை, மாலை நேரங்களில் தனது சகோதரருக்கு பஜ்ஜிக் கடையில் உதவியாக இருந்துள்ளார்.
மருத்துவ வசதி குறைவு, மக்கள் தொகையும் அதிகம்.. கட்டுக்குள் கொரோனா.. உத்தர பிரதேசம் சாதித்தது எப்படி?
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிவராமகிருஷ்ணன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 4ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 5 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதை தவறாக ஜன்னல் பஜ்ஜிக் கடை உரிமையாளர் சந்திரசேகரன் என்று நினைத்து சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து சந்திரசேகரனே முன் வந்து தான் இறக்கவில்லை என்றும் தனது சகோதரன் சிவராம கிருஷ்ணன் இறந்து விட்டதாகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார். சகோதரர் இறந்து விட்டதால் ஒரு மாதத்திற்கு கடையை திறக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக மயிலாப்பூர் சமையல் கலைஞர் செல்லப்பா, திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.