லாக்டவுனில் 12 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர்? - நெட்டிசன்களுக்கு தமிழக அரசு 'நச்' ரிப்ளை
சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 12 மணிக்கு மேல் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யலாமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மக்களை வாட்டி வதக்கி வருகிறது. சொல்ல முடியா இன்னல்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். அரசாங்கங்கள் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
'இன்னும் நான்கே மாதம்... கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்'.. அடித்து கூறும் பிரிட்டன்.. எப்படி?
குறிப்பாக, தமிழகத்தில் வைரஸ் பரவல் எகிறியுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒரு காட்டு காட்டிவிட்டு தான் செல்கிறது.
கட்டுப்படாத கொரோனா
இந்த சூழலில், கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு முழு லாக் டவுன் அறிவித்துள்ளது. நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், முழு லாக் டவுன் என்பதும் ஒன்று. இந்த சூழலில் தான் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு தடை
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 மணி வரை
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி உண்டா
இந்த நிலையில், முழு ஊரடங்கு நேரத்தில் பகல் 12 மணிக்கு மேல் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. ஏனெனில், காய்கறிகள் முதல் சகலமும் ஆன்லைனில் கிடைக்கிறது. மக்கள் வெளியே செல்லத் தேவையில்லை. அரசு 12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று உத்தரவிட்டிருப்பதால், ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஆப்ஷன் உள்ளதா என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாகவும், சமூக தளங்களிலும் எழுப்பப்பட்டது.
12 மணிக்குள்
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, 12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்காது என்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஆகையால், 12 மணிக்கு மேல் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யவும் அனுமதி கிடையாது. நேரடியாக செல்வதோ, ஆன்லைனில் டெலிவரியோ, எதுவாக இருந்தாலும் 12 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. (என்னவோ போடா மாதவா!)