வாட்.. கன்னியாகுமரியில் போட்டியிடப் போகிறாரா ராகுல்.. என்ன இப்படி கிளம்பிட்டாங்க
Recommended Video
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் போட்டியிடலாம் என்று ஒரு தகவல் படு சூடாக உலவி வரும் நிலையில் அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. நாகர்கோயில் நாடாளுமன்ற தொகுதிதான் இப்போது கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது. கன்னியாகுமரி தொகுதி எப்போதுமே தேசிய அரசியல் பேசும் தொகுதி.
காமராஜர் அந்த தொகுதியில் வென்றது முதல் அந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாகவே விளங்கி வந்தது. மத அரசியல் பேசும் அந்த தொகுதியில் ஒரு சில முறை இப்போதைய சிட்டிங் எம்.பியான பொன்.ராதா வென்றுள்ளார். அதை தவிர்த்து அந்த தொகுதி பெரும்பாலும் காங்கிரசுக்கு வாய்ப்புள்ள தொகுதியாகவே பார்க்கப்படுகிறது.
அமேதி சவால்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி நேரு குடும்பத்திற்கு உத்திரவாத வெற்றியை அளிக்கும் தொகுதியாக உள்ளது. இடையில் ஒருமுறை மட்டும் 1998-தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சதிஸ் சர்மா பாஜகவின் சஞ்சய் சிங்கிடம் தோல்வியை தழுவினார். அதுவும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில். பிறகு மீண்டும் அந்த தொகுதி காங்கிரஸ் வசமே உள்ளது. 1999-ல் சோனியா அங்கு போட்டியிட்டு வென்றார்.
வாக்குகள் சரிவு
அதன் பின்னர் 2004 -ல் ராகுல் அங்கு போட்டியிட்டு வென்றார். அப்போது 71 சதவிகித வாக்குகளை பெற்ற ராகுல் 2009-ல் 66சதவிகிதமும் அதுவே பின்னர் 2014 ல் 46 சதவிகித வாக்குகளை பெற்று வெல்ல வேண்டிய நிர்பந்தம் ஆனது. இப்படியாக அமேதி தொகுதியில் ராகுலின் வாக்கு சதவிகிதம் குறைந்தே வந்துள்ளது.
இரானியை வீழ்த்தினார்
2014 -ல் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து இப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் அதுவரை இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாஜகவின் வாக்கு சதவிகிதம் அப்போது 37 சதவிகிதம் என்றானது. அது முதலே அந்த தொகுதியை எப்படியும் கைப்பற்றியே தீருவது என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
கைவிட்ட சட்டசபை
அதன் பின்னர் 2017 -ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலும் அமேதி தொகுதியை காங்கிரசுக்கு பெற்றுத் தரவில்லை. அமேதி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 4 தொகுதிகள் பாஜகவுக்கும் ஒரு தொகுதி சமாஜ்வாடி கட்சிக்கும் சென்றது. இதனையடுத்து பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா, உ.பி மாநில முதல்வர் ஆகியோர் அமேதி தொகுதிக்கு அடிக்கடி விசிட் செய்து கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மாறுவாரா
கடந்த ஜனவரி மாதம் அமேதி தொகுதிக்கு சென்ற ஸ்ம்ரிதி இரானி ரூ.77கோடிகள் அளவுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதோடு எப்படியும் இந்த தொகுதியை நேரு குடும்பத்திடம் இருந்து பறிப்பது என்ற நோக்கில் பாஜக அங்கு பணியாற்றி வருகிறது. இதனால் ராகுல் தொகுதி மாறினால் நல்லது என்று காங்கிரசார் கூறி வருகிறார்களாம்.
குமரி ராசி
இந்த நிலையில்தான் கன்னியாகுமரி பெயர் ராகுலோடு சேர்த்து பேசப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலோ சட்டமன்ற தேர்தலோ கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி வெல்கிறதோ அந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் சென்டிமென்ட். அதோடு கடந்த ஓகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டபோது மாவட்ட மக்களின் கோபம் பாஜக மீதும், மாநில அரசு மீதும் கடுமையாக இருந்தது. அதே வேளையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ராகுல் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது பொதுவாகவே அனைவரிடமும் நல்ல நம்பிக்கையை பெற்றுள்ளார்.
அவர் ஐடியாவாம்
அதோடு ராகுல் இங்கு போட்டியிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழக தலைவர் மாற்றப்பட்ட விவகாரத்திலும் இந்த அமைச்சரின் ஆலோசனையையே ராகுல் கேட்டதால் வேட்பாளராக போட்டியிடும் விவகாரத்திலும் அவரது ஆலோசனையை ராகுல் கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ராகுல் அங்கு வேட்பாளாராக போட்டியிடும் பட்சத்தில் எப்போதும் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் கன்னியாகுமரி இம்முறை ராகுல் வேட்பாளாராக நிற்கும் பட்சத்தில் பெருவெற்றியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
அது சரி, குமரியும் பேச்சலர்தான்.. ராகுலும் பேச்சலர்தான்.. அப்படிப் பார்த்தால் பெயர் ராசி ஒத்துப் போகுதேய்யா.. செம கலகலப்பாதான் போய்ட்டிருக்கு தேர்தல் களம்.