பாஜக ‘டாப்’ தலையை மாற்ற ஆர்.எஸ்.எஸ் முடிவு? ‘சமன்வய பைட்டக்’கில் கடுகடுத்த நிர்வாகி! அப்போ அண்ணாமலை?
சென்னை : தமிழ்நாடு மாநில பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், மிக பலம் வாய்ந்த அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து அவரை மாற்ற ஆர்.எஸ்.எஸ் அதிரடியாக முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
பாஜக நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் இடையே முரண்கள் ஏற்பட்டு வந்ததாக பாஜகவுக்குள் பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் பகீர் கிளப்பிய பாஜக நிர்வாகிகள் டெய்சி சரண் - திருச்சி சூர்யா போன் உரையாடலின் போதும், கேசவ விநாயகனை குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசியிருந்தார் திருச்சி சூர்யா.
இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடந்த சங் பரிவார் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
உரத்தை போதைப்பொருள் என்ற பாஜக.. நம்பிய எடப்பாடி! கொக்கைன் கடத்தினாரா திமுக கவுன்சிலர்? வெளியான உண்மை
ரியல் பவர்
பாஜகவில் தேசிய தலைவர்களாகவோ, மாநில தலைவர்களாகவோ இருப்பவர்கள் நீண்டகால ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் கூட, மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுபவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவராகவே இருப்பார். மாநிலத் தலைவருக்கு அமைப்பு ரீதியாக பலம் இருந்தாலும், நிர்வாக ரீதியான அதிகாரம் அமைப்புச் செயலாளருக்கே இருக்கும். அமைப்புச் செயலாளர் பதவிக்கு வருபவர்கள் திருமணம் செய்யாத ஆர்.எஸ்.எஸ் காரிய கர்த்தர்களாகவே இருப்பார்கள்.
அண்ணாமலை - கேசவ விநாயகன் பனிப்போர்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கும் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் இடையே நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பனிப்போர் நடந்து வந்தது. அண்ணாமலையை நிர்வாகிகள் நியமனத்தில் தன்னிச்சையாக செயல்பட விடாமல், கேசவ விநாயகன் இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததாக அவ்வப்போது பேச்சுகள் கிளம்பும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
vபதவி வாங்கியது இப்படித்தானே
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அரசியல் அரங்கில் பாஜகவில் கேசவ விநாயகன் செலுத்தும் ஆதிக்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
சமன்வய பைட்டக்
இந்நிலையில் தான் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் வழிகாட்டுதலில் இயங்கும் 30க்கும் அதிகமான சங் பரிவார் அமைப்புகள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி செயல் திட்டங்களை வகுப்பது வழக்கம். இது ‘சமன்வய பைட்டக்' என அழைக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்பும் கடந்த ஓராண்டில் செய்த பணிகளை ஆய்வு செய்து, அடுத்த ஓராண்டிற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.
பாஜக முக்கிய நிர்வாகிகள்
பள்ளிகளில் மத அடிப்படைவாத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவையும் நடந்த இந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களும் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ் வியூகம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்தது, பொது இடங்களில் கூட்டங்களை நடத்த விடாமல் அளிக்கப்படும் நெருக்கடிகள், அரசுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்களால் கட்சிக்குள் நிலவி வரும் குழப்பங்கள் பற்றியும், 2024ல் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக வளர்ச்சி
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, தமிழ்நாட்டில் பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது பற்றிப் பேசியுள்ளார். கணிசமான இடங்களை அரசியல் ரீதியாக நாம் பிடித்து விட்டால், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளை வளர்ப்பது எளிதாகிவிடும், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சிக்கு அங்கு பாஜக வெற்றி பெற்றதே காரணம் எனப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப சர்ச்சைகள்
மேலும், பாஜகவில் சமீபத்தில் நடைபெற்ற சர்ச்சைகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளோடு தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி மன்மோகன் வைத்யா. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கட்டுப்பாட்டுக்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால், சமீபகாலமாக பாஜக தலைவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற புகார்கள் எழுந்தால், நம்மால் முன்னோக்கி நகர முடியாது, பெண்கள் விவகாரம் மோசமானது எனக் கூறியுள்ளார்.
குழிபறிக்கும் வேலை
மேலும், கட்சி ஒருபக்கம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி வரும் நிலையில், மறுபக்கம் கட்சிக்குள்ளேயே தலைவர்களுக்கு இடையேயான மோதலால் மாற்றி மாற்றி குழிபறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவது மோசமான பழக்கம். கட்சியில் தனி மனிதர் மீது புகார் என்றாலும் கட்சிக்குத்தான் களங்கம் என பாஜக நிர்வாகிகளை எச்சரித்துள்ளார். அண்ணாமலை - கேசவ விநாயகன் பனிப்போரை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.
கேசவ விநாயகன் மாற்றம்?
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பாஜக மாநில அமைப்புச் செயலாளரை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கேசவ விநாயகன் பெயர், சமூக வலைதளங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அவரை மாற்றிவிட்டு வேறொரு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை கொண்டு வரவும் பாஜக தேசிய தலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய அமைப்புச் செயலாளர் யார்?
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நீண்டகால முழுநேர ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ரவிக்குமார் பாஜக தமிழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடத் தொடங்கி இருக்கின்றன. அதேசமயம், தனது மேலிட தொடர்புகள் மூலம், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் கேசவ விநாயகன் மூவ் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.