சர்கார் திரைப்பட கதாப்பாத்திரங்கள் எந்த தலைவர்களின் குறியீடு?
சென்னை: சர்கார் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் கதாப்பாத்திரங்கள் உண்மையிலேயே அதிமுகவைதான் குறிக்கிறதா, அதன் தலைவர்களை மட்டும்தான் குறிக்கிறதா என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ், தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான சர்கார் திரைப்படத்தில் அதிமுகவையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் இருந்து துவங்கி, மறு சென்சார் செல்லும் வரை சர்ச்சை, ஆர்ப்பாட்டம், போராட்டம் தொடர்ந்தன.
வேறு கட்சி போராட்டம் இல்லை
இது அத்தனையையும் முன்னெடுத்தது அதிமுகவினர்தானே தவிர அத்திரைப்படத்தில் எங்களைத்தான் கேலி செய்துள்ளார்கள் என்று கூறி வேறு எந்த கட்சியும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை. மதுரையில், எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவே நேரடியாக களத்தில் இறங்கி திரையரங்கை முற்றுகையிட்டது இந்த பரபரப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியிருந்தது. ஆனால் உண்மையிலேயே, சர்கார் படத்தில் அதிமுகவையும் அதன் தலைவர்களை மட்டும்தான் விமர்சனம் செய்ததா? என்றால் இல்லை என்பதுதான் பொருள்.
குறியீடுகள்
சர்கார் திரைப்படம் பல குறியீடுகள் வாயிலாக, அரசியலை கிண்டல் செய்திருந்தது. அந்த குறியீடுகள் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சர்கார் படத்தின் திரைக்கதை வழக்கமான முருகதாஸ் திரைப்பட பாணியில் விறுவிறுப்பாக இல்லாமல், பிரச்சார தொனியில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளதற்கு, முருகதாஸ் இதுபோன்ற குறியீடுகளில் அதிக கவனம் செலுத்தி, தனது டிரேட் மார்க்கான, லாஜிக்குடன் கூடிய, பரபர திரைக்கதையை மறந்ததுதான் காரணமாக இருக்க கூடும்.
வேறு கட்சியும்
சர்கார் திரைப்படத்தில் முதல்வர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பழ.கருப்பையாவை, ஒரு கட்சி மட்டுமே தங்களுடைய தலைவராக பொருத்திப் பார்த்து சண்டையிட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இன்னொரு கட்சியினரும் அதை பொருத்தி பார்க்க முடியும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். அவருடன் நம்பர்-2 என்ற பெயருடன் உலா வரும் அமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ராதாரவி, ஒரு காட்சியில், தெலுங்கில் பேசுவதை குறிப்பிட்டு, "இது அவருல்ல.." என்று சுட்டிக்காட்டி, இப்போ புரிகிறதா, இது இன்னொரு கட்சியின் நம்பர்-2 தலைவர் ரெஃபரன்ஸ்தான் என்கிறார்கள்.
மலையாள பேச்சு
இந்த படத்தில் மற்றொரு காட்சியில், மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும், பழ.கருப்பையா கதாப்பாத்திரம், விஜய் கதாப்பாத்திரத்திடமிருந்து ஒரு மனுவை பெற்றுக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல், மலையாளத்தில் சில வரிகள் பேசுவது போன்ற காட்சி படத்தில் இடம் பிடித்திருக்கும். இப்படி பேசுவதை மறைந்த ஒரு மூன்றெழுத்து முக்கிய தலைவரை குறிக்கத்தான் என்றும் சொல்கிறார்கள்.
இருபொருள்
பழ.கருப்பையா, ராதாரவி மற்றும் வரலட்சுமி ஆகியோரின் பாத்திரப்படைப்புகள், ஒரு கட்சியின் சில தலைவர்களை மட்டுமே குறிக்க கூடியது அல்லாமல், மற்றொரு கட்சியின் முக்கிய தலைவர்களையும் குறிக்கும் வகையில், இரு பொருள் தரும் வகையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உற்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரு கட்சியினர் மட்டும் தேவையில்லாமல் ஓவராக பொங்கி, படத்திற்கு பப்ளிசிட்டி செய்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு உதவியதுதான் மிச்சம்.