மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா.. மீண்டும் ஒரு பரபரப்பு எதிர்பார்ப்பு
விசாரணை ஆணையத்தில் ஆஜராக சசிகலா பரோலில் வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி நடத்தி வரும் விசாரணை கமிஷன் முன்பு விரைவில் சசிகலாவும் ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் நீண்ட காலமாகவே விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை கிட்டத்தட்ட 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிலிருந்து, பாதுகாப்பு அதிகாரிகளிலிருந்து ஒருவரையும் விடாமல் இந்த விசாரணை நடந்தது.
அப்போது சசிகலா சொந்தக்காரர்களிடம் ஜெயலலிதா மரணம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சசிகலா சிறையில் இருப்பதால் ஆணையத்தில் அவரால் நேரில் ஆஜராக வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக பிரமாண பத்திரம்தான் சசிகலா தாக்கல் செய்திருந்தார்.
சந்தித்தவர்கள் பட்டியல்
அந்த பத்திரத்தில், யார் யாரெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது உட்பட பல தகவல்களை சொல்லி இருந்தார். குறிப்பாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ், ஓபிஎஸ், தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவர்கள் எல்லாரும் எந்தெந்த தேதிகளில் சந்தித்து விட்டு போனார்கள் என்று கூறியிருந்தார்.
தவறான தகவல்கள்
ஆனால் சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்களில் பெரும்பாலானவை தவறாக உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவுக்கு 20 டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாக சசிகலா சொன்ன தகவலும் தவறாக உள்ளது என்று ஆணையம் அன்றே கூறியிருந்தது. இந்நிலையில், சசிகலா அன்று அளித்த தகவலின்படியே, ஓபிஎஸ், விஜயபாஸ்கர், தம்பிதுரை போன்றவர்களிடம் விசாரணை நடத்தலாமா என்று ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இறுதிக்கட்ட விசாரணை
தற்போது வருகிற 10-ம் தேதிக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதனால் கண்டிப்பாக சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது உறுதியாகி உள்ளது. ஆனால் எந்த வகையில் சசிகலாவிடம் விசாரணை நடத்து என்பதுதான் யோசனையாக உள்ளதாக கூறப்படுகிறது.
வீடியோ கான்பரன்ஸ்
ஏற்கனவே வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜெயிலுக்குள் அதற்கான வசதி இல்லாததால் அது கைவிடப்பட்டு விட்டது. தற்போது பரோல் அளிக்கப்பட்டு சசிகலா சென்னை வரவழைக்கப்படுவாரா? அல்லது அதிகாரிகளே ஜெயிலுக்குள் போய் விசாரணையை ஆரம்பிப்பார்களா அல்லது மீண்டும் வீடியோ கான்பரஸ் மூலம் விசாரணை நடத்தப்படுமா என்பதுதான் தெரியவில்லை. ஆனால் சசிலாவிடம் விசாரணை நடத்து வேண்டும் என்பது மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
தனது கணவர் நடராஜன் இறந்தபோது பரோலில் வந்திருந்தார் சசிகலா. அதன் பிறகும் சரி, அதற்கு முன்பும் சரி அவர் வெளியில் வரவே இல்லை. இந்த நிலையில் ஆறுமுகசாமி விசாரணையில் நேரில் ஆஜராக அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.