அடுத்தடுத்து பாய்ந்த ரெய்டுகள்.. குறி செந்தில் பாலாஜிக்காம்.. அதுவும் அவருக்காகவாம்!
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் விதமாக திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் நடக்கிறதாம்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் விதமாக திமுகவை சேர்ந்த எம்எல்ஏ செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் தொடர்பான திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தன்னுடைய அரசியல் அறிவிப்பு பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று ரஜினிகாந்த் நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அதற்குள் தமிழக தலைப்புச்செய்திகளில் கொரோனா நீங்காத இடம் பிடித்துவிட்டது.
எனக்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம், நாம் ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வர் கிடையாது. வேறு ஒரு நபர்தான் முதல்வராக இருப்பார். நான் கட்சிக்கு மட்டும் தலைவராக இருப்பேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார்.
இன்னொரு விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அறிவித்து இருந்தார். தமிழகத்தில் பெரிய கட்சிகள் திமுக, அதிமுக ஆகியவை. அவர்களிடம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சி பதவிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின் கட்சியில் இருக்கும் யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.அங்கு பலருக்கும் பதவிகள் கிடைப்பது இல்லை. அவர்களால் கட்சியில் வளர முடியவில்லை.
அழைக்க வேண்டும்
அவர்களை நாம் கட்சிக்குள் இழுக்க வேண்டும். திமுக, அதிமுகவில் இருக்கும் திறமையான நபர்களுக்கு நம் கட்சியில் அழைப்பு விடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஒவ்வொரு கட்சியாக முக்கியப் புள்ளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு இழுக்க ஆரம்பித்துள்ளனராம். அந்த வகையில் திமுகவில் சில தலைகளுக்கு குறி வைத்துள்ளனராம். அதில் முக்கியப் புள்ளியாக செந்தில் பாலாஜியை சொல்கிறார்கள்.
செந்தில் பாலாஜி
கரூர் திமுகவில் தற்போது நிறைய பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கு முன்னாள் திமுக மாவட்டச் செயலாளருக்கும், அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரின் தொண்டர்களுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை மடை மாற்றி ரஜினி பக்கம் கொண்டு செல்லும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதாம்.
என்ன நெருக்கம்
சமீபத்தில் அதிரடி வருமான வரி சோதனைக்குள்ளானார் செந்தில் பாலாஜி. இன்னும் கூட அவரால் மீண்டு வர முடியவில்லை.கட்சிப் பணிகளையும் கூட அவரால் பார்க்க முடியவில்லை. இந்த வருமான வரி ரெய்டை அவரை ரஜினி பக்கமாக திருப்பி விடுவதற்காகத்தான் என்று சொல்கிறார்கள். இந்தப் பக்கம் வந்துருங்க.. ஓஹோன்னு இருக்கலாம் என்று செந்தில் பாலாஜிக்கு ஆசை காட்டப்படுகிறதாம்.
அதெல்லாம் காமெடி
ஆனால் திமுக தரப்போ இதை மிகவும் கூலாக அணுகி வருகிறது என்கிறார்கள். திமுகவை விட்டு செந்தில் பாலாஜி செல்ல மாட்டார். அவருக்கு திமுகவில் நல்ல மரியாதை இருக்கிறது. ஸ்டாலின் உடன் அவர் நெருக்கமாக இருக்கிறார். பதவிக்கு ஆசைப்பட்டு செல்லக்கூடிய நபர் அவர் இல்லை. அதேபோல் தனது கட்சியில் பதவி யாருக்கும் கிடையாது என்று ரஜினியே கூறிவிட்டார். அதனால் ரஜினியை நம்பி செந்தில் பாலாஜி ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.
செந்தில் பாலாஜி ஆரம்பத்தில் திமுகவில் இருந்தவர். பின்னர் அதிமுகவுக்குப் போனார். அதிலிருந்து அமமுகவுக்குத் தாவினார். அங்கும் சரிப்பட்டு வராமல் திமுகவுக்குத் தாவி வந்தவர் என்பது நினைவிருக்கலாம்.