இப்படி ஒரு பேட்டி கொடுத்திட்டாரே தங்க தமிழ்ச்செல்வன்.. எப்போ வேண்டுமானாலும் திமுகவுக்கு கல்தாவா?
Recommended Video
சென்னை: திமுகவில் இன்று இணைந்துள்ள தங்கத் தமிழ்ச்செல்வன், மதில் மேல் பூனை போன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதை அவரது இன்றைய பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் துவங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார். ஆனால் சமீபத்தில் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார், தங்க தமிழ்ச்செல்வன்.
ஒரே நாளில்.. ஒரே கல்லில்.. 2 மாங்காய் அடித்த மு.க. ஸ்டாலின்.. பலே திமுக
வெற்றியை மதித்து சேர்ந்தேன்
இதன்பிறகு, தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டிதான், சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அவர் கூறியதை பாருங்கள்: லோக்சபா தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை மதித்து தான் நான் திமுகவில் சேர்ந்து உள்ளேன். ஸ்டாலின் இப்போது எல்லோரையும் அனுசரித்து செல்ல கூடிய மனப் பக்குவத்திற்கு வந்து விட்டார். அவரது உழைப்பை முதலில் மதிக்க வேண்டும். செல்வகணபதி, சேகர்பாபு, செந்தில் பாலாஜி உட்பட அதிமுகவில் இருந்து திமுக வந்தவர்களுக்கு நல்லதுதான் செய்துள்ளார்கள். எந்த விரோதமும் அவர் கடைபிடிக்கவில்லை.
முடிவெடுக்க முடியவில்லை
ஒற்றை தலைமையில் உள்ள கட்சிதான், சிறப்பாக செயல்பட முடியும். அப்படி செயல்பட்டதன் காரணமாக, திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதிமுகவில், ஜெயலலிதா இறந்த பிறகு, பல்வேறு நிலைப்பாடுகளில் முட்டி மோதி நிற்கிறார்கள். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலைமையில் அதிமுக உள்ளது. அதிமுகவை தற்போது பாஜக இயக்கிக் கொண்டு இருக்கிறது. எனவே தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர நான் விரும்பவில்லை.
பெரிய வெற்றி
ஸ்டாலினை நான் இரு விஷயங்களுக்காக பாராட்டுகிறேன். அவர் கடுமையான உழைப்பாளி. மற்றொன்று கலைஞர் மறைந்த நாளில், ஒரே நாள் இரவில், உயர் நீதிமன்றம் சென்று மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க இடம் வாங்கினார். அந்தத் துணிச்சலை பாராட்டி ஆகணும். ஆர்கே நகரில் தோற்றாலும் கூட, திமுக தான் மக்கள் உரிமைக்காக போராடும் என்று கூறி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது அல்லவா, அந்த வெற்றிக்காகத்தான், நான் திமுகவில் சேர்ந்துள்ளேன். இவ்வாறு கூறினார் தங்க தமிழ்ச்செல்வன்.
தேர்தல் வெற்றி
தங்க தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் ஒப்புக்கொண்டபடி, திமுகவில் ஒற்றை தலைமை உள்ளதும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளதும்தான் திமுகவில், அவர் சேர காரணம். எந்த நிலைமையிலும், திமுக கொள்கைகள் பிடித்து நான் இங்கு வந்து சேர்ந்து உள்ளேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, தங்க தமிழ்ச்செல்வன். சொல்லவும் முடியாது. காரணம், சமீப காலம் வரை, ஸ்டாலினை கடுமையாக வசைபாடியவர், தங்க தமிழ்ச்செல்வன்.
அதிமுகவில் எதிர்ப்பு
அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனை, சேர்ப்பதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதற்கு காரணம், தேனி லோக்சபா தொகுதியில், தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக அமமுக சார்பில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன் என்பதோடு, தனக்கு மாற்று சக்தியாக அவர் செயல்பட துடிக்கிறார் என்ற சந்தேகமும் தான்.
எனவேதான் அதிமுகவுக்கு போகமுடியாமல் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்ததாக ஒரு பேச்சு இருக்கிறது.
அதிமுக முக்கிய புள்ளி
இந்த நிலையில் தங்கதமிழ்செல்வன், அளித்த, பேட்டியை வைத்து பார்க்கும் போது, ஒருவேளை சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு, அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பட்டால், மீண்டும் அதிமுக பக்கம் இவர் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் தங்கதமிழ்செல்வன். அதற்கு பரிசாக ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார் ஜெயலலிதாவால். அந்த அளவுக்கு அதிமுகவில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அங்கு செல்லவில்லை என்பதை அவரது பேட்டியும் உறுதி செய்துவிட்டது.
வெற்றிதான் முக்கியமா
தேர்தல் வெற்றிக்காக ஒரு கட்சிக்கு மாறியதாக கூறும் தங்க தமிழ்ச்செல்வன், ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை, வெற்றி பெற்றாலும் அந்த பக்கம் சென்று விடுவாரா, என்று கிண்டலாக சில அரசியல் விமர்சகர்கள் கேட்பதையும் பார்க்க முடிகிறது. ஆக மொத்தத்தில் தங்க தமிழ்ச்செல்வன், பேட்டி, மதில் மேல் பூனை போல இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.