முடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி...? விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்
சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக கொடுக்கும் நெருக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
சீட் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் நமது உரிமை என்றும், அதில் எப்படி தேமுதிக அதிகாரம் செலுத்தி பிடிவாதம் பிடிக்கலாம் எனவும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
இதனால் இப்போது உள்ள நிலைமை தொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப்பாதை நிச்சயம் திசைமாறக்கூடும் எனத் தெரிகிறது.
கிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை
இடைத்தேர்தல்
அதிமுக, பாஜக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக அடுத்ததாக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே ஏப்ரல் மாதம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியிடங்களில் ஒன்றை பிடிக்க வேண்டும் என்பதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மிக உறுதியாக இருக்கிறார். இதற்காக அதிமுகவுக்கு தொடர்ந்து தேமுதிக தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டு வருகின்றன. ஆனால், எத்தனையோ அழுத்தங்கள், பிரச்சனைகள், நெருக்கடிகளை சமாளித்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு இந்த விவகாரம் ஒரு பெரிய பொருட்டே இல்லை எனக் கூறப்படுகிறது.
சாடல்
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என கூறியிருந்தார். மேலும், அண்மையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே ராஜ்யசபா சீட் பற்றி அதிமுகவிடம் கேட்டதாகவும், பின்னால் பார்த்துக்கொள்வோம் என பதில் தந்ததாகவும் போட்டுடைத்தார். கூட்டணி தர்மத்தை தேமுதிக கடைபிடிப்பதாக கூறிய அவர், மற்ற கட்சியும் கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதிமுக மீது மறைமுகமாக சாடினார்.
விரிசல்
தேமுதிக கோரிக்கை தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் உள்ள யார் வேண்டுமானாலும் ராஜ்யசபா சீட் கேட்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை நாங்கள் பார்க்க வேண்டுமல்லவா என பொளேர் பதில் தந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அதிமுகவை தவிர கூட்டணிக் கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கிடையாது என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார் முதல்வர். எடப்பாடியாரின் பதில் அதிமுக தேமுதிக கூட்டணியில் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
திசைமாறும்
இதனிடையே பாமகவை போல் தேமுதிகவுக்கு அதிமுக ராஜ்யசபா சீட் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த பிரேமலதா விஜயகாந்த் விரைவில் கூட்டணியில் புயலை கிளப்புவார் என கூறப்படுகிறது. ஆனால் எதையும் எதிர்கொள்ள தயார் என்ற மனநிலையில் தான் முதல்வர் அந்த வார்த்தைகளை உதிர்த்தாராம். இதனால், சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் கூட்டணிப்பாதை நிச்சயம் திசைமாறக்கூடும் எனத் தெரிகிறது.