அடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்?
தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர்களை பாஜக குறி வைப்பதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: அடுத்தடுத்து காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகளில் குதிப்பதால், காங்கிரஸ் கட்சி குறி வைக்கப்படுகிறதோ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரசுக்கு பொதுவான ஒரு எதிரி உண்டு என்றால், அது பாஜகதான். அதுவும் இப்போதுள்ள பாஜக, நாட்டின் எல்லா ஜனநாயக அமைப்புகளையும் சிதைத்து விட்டது என்றே காங்கிரஸ் பகிரங்கமாக சொல்கிறது.
இந்நிலையில்தான், தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர்கள் குறி வைக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை சிபிஐ நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன.
தள்ளுபடி
மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல் புரி, ரூ. 354 வங்கி மோசடி வழக்கில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைது செய்துவிடக்கூடாது என்று ரதுல்புரி, முன்ஜாமீன் கோரியும், இவரது மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் மேல்முறையீடு போவதற்கு முன்பேயே இவர் கைது செய்யப்பட்டுவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்
இப்போது ப.சிதம்பரமும் அதே பாணியில் அணுகப்படுகிறார். ஹைகோர்ட்டில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அப்பீலுக்காக அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் இதுவரை அவரது கோரிக்கைக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
நிகழ்வுகள்
இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் குறி வைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித்தான் நடக்கிறதோ என்ற தோற்றமும் வலுப்பெற்று வருகிறது.
கார்த்திக் சிதம்பரம்
ப.சிதம்பரத்தை பாஜக அரசு குறி வைக்கும் என்பது ஏற்கனவே யூகிக்கப்பட்ட ஒன்றுதான், நடந்து முடிந்த எம்பி தேர்தலில், கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் தராமல் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் கட்சிக்குள்ளேயே போர்க்கொடி தூக்கிய சமயத்தில் ப.சிதம்பரம் அளவுக்கு அதிகமாகவே சிரமப்பட்டுவிட்டார்.
எம்பி சீட்
நேரடியாக மன்மோகன்சிங்கை சந்தித்து பேசியதுடன், "காங்கிரஸ் ஆட்சியின்போது, கட்சிக்காக பல நெருக்கடி சமயங்களிலும் பல்வேறு காலகட்டங்களிலும் தான் எப்படியெல்லாம் செயல்திட்டங்களை தீட்டினேன், எவ்வளவு முடிவுகளை எடுத்தேன் அன்றைக்கு தான் எடுத்த முடிவுகளால்தான் இன்றைக்கும் மோடி அரசு என்னையும், என் குடும்பத்தையும் பழிவாங்கி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கு அடுத்தபடியாக என்னைதான் மோடி அரசு குறி வைக்கிறது" என்று விலாவரியாக சொன்னதுடன், மகனுக்கு ஒரு வழியை காட்ட சொல்லி கேட்டதாகவும், இதையடுத்தே சோனியா, ராகுல் உள்ளிட்டோர் கலந்து பேசி கார்த்தி சிதம்பரத்துக்கு எம்பி சீட் தரப்பட்டதாகவும் ஒரு செய்தி அடிபட்டது.
மாயாவதி
ஆக.. பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டது என்பதும், எப்படியும் குடும்பத்தை உள்ளே தூக்கி வைக்காமல் விடாது என்பதையும் ப.சிதம்பரமே நன்கு அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், எத்தனையோ வழக்குகள், சர்ச்சைகள், புகார்கள், உள்ள மாயாவதி ஆகட்டும், ஜெகன்மோகன் ரெட்டி ஆகட்டும்.. இவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் இதுவரை இந்த அளவுக்கு விரட்டி விரட்டி நடவடிக்கை பாயவில்லை என்பதே பலரின் கேள்வியாகும்.
வலுக்கும் சந்தேகம்
சுருக்கமாக சொன்னால், பாஜகவை ஆதரிப்பவர்கள் எப்பேர்ப்பட்ட வழக்கில் சிக்கி இருந்தாலும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் பாஜகவின் அபிமானத்தினால் பாதுகாக்கப்படுகிறார்களோ என்ற ஐயமும், சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது. மேலும் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர்கள் குறிவைத்து, பழி வாங்கப்பட்டு வருகிறார்களோ என்ற தோற்றத்தையும் சமீபத்திய நடவடிக்கைகள் ஏற்படுத்தி உள்ளது.