ஒபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் உறவு சுமூகமாக இல்லையோ... பட்ஜெட் குறித்து ஈஸ்வரன் பொளேர் கேள்வி
சென்னை: இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புக்கள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காக காத்திருக்கிறதா ?." என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா.
நம்பிக்கை பொய்யானது
தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்து செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி இருக்கிறார்கள்.
தேர்தல் நேர நாடகம்
பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை. காலாவதியாக போகின்ற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ இரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம்.
கஷ்டம்
கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.
110 விதியின் கீழ் அறிவிப்பா?
இந்நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புக்கள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காக காத்திருக்கிறதா ?." இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.