ஆஹா.. ஆட்சியை பிடிக்க திட்டமா... 3வது அணியாக ஒன்றிணைகிறதா திரைத்துறை?
சென்னை : தமிழகத்தை பொறத்தவரை சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்கள் அரசியலுக்கு வருவதும், தனிக்கட்சி தொடங்குவதும், ஆட்சியில் அமர்வதும் புதிதல்ல. மிகப் பெரும் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் தங்கள் வாழ்க்கையை துவங்கி, பிறகு அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
ஜெயலலிதாவிற்கு பிறகு நீண்ட காலமாக சினிமா துறையை சார்ந்த யாரும் அரசியலுக்கு வராமல் இருந்தனர். வந்தவர்கள் சிலரும் பெரிய அளவில் வளரவில்லை.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்ததை போன்று அரசியலிலும் மிகப் பெரிய ஆளுமையாக ஜெயலலிதா உருவெடுத்தார்.
முதலில் வந்த சரத்குமார்
ஜெயலலிதாவிற்கு பிறகு சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் சரத்குமார். 1996 ம் ஆண்டு திமுக.,வில் இணைந்தார். 1998 ல் திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோற்ற போதிலும், 2001 ல் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றார். பிறகு திமுக.,வில் இருந்து விலகி, 2006 ல் அதிமுக.,வில் இணைந்தார். பிறகு அங்கிருந்தும் விலகி 2007 ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக்கட்சியை துவக்கினார்.
முதல் கட்சி , முதல் வெற்றி
சரத்குமாருக்கு பிறகு அரசியலுக்கு வந்தாலும், அவருக்கு முன்பே தனிக்கட்சி துவக்கியவர் விஜயகாந்த். 2005 ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கிய விஜயகாந்த், 2006 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். கட்சி வேட்பாளர்களில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார். பிறகு 2011 ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு, எதிர்க்கட்சி தலைவரானார்.
அரசியல் சரிப்பட்டு வரல
நடிப்பில் வெற்றி பெற்ற போதிலும் கார்த்திக்கால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. அரசியலில் நுழைந்த கார்த்திக், 2006 ல் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரானார். தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை நடத்தி வருகிறார். இருந்தும் இதுவரை எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.
அரசியலுக்கு வந்த நடிகர்கள்
இவர்களை போன்று இயக்குனர் டி.ராஜேந்தர், இயக்குனர் சீமான், நடிகர் கர்ணாஸ் ஆகியோரும் தனிக்கட்சி துவக்கினர். லேட்டஸ்ட்டாக சீமான் கட்சியில் இருந்து விலகி நடிகர் மன்சூர் அலிகானும் தனிக்கட்சி துவக்கி உள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் அடிபட்டது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கமல், ரஜினி
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார், கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால் தொடர்ந்து அமைதி காத்து வந்த ரஜினி, சமீபத்தில் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுடன், கட்சி துவங்க உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பின்வாங்கி விட்டார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த கமல் 2018 ல் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கினார். இந்த முறை இவர் தேர்தலிலும் போட்டியிட உள்ளார்.
ஒன்று சேரும் திரைத்துறை
சினிமாவில் இருந்து அரசியலும் வந்து, பல்வேறு முக்கிய கட்சிகளில் இணைந்து, பிறகு தனிக்கட்சி துவங்கிய இந்திய ஜனநாயக் கட்சி நிறுனரான வேந்தர் மூவிஸ் பாரிவேந்தர், சரத்குமார் ஆகியோர் இப்போது கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணியில் விஜயகாந்த், கமல் ஆகியோர் இணைய வர வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளனர்.
மக்கள் ஏற்பார்களா
கமல், சூப்பர் ஹீரோ அந்தஸ்தில் இருப்பவர். சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் தலைவர் பொறுப்பு வகித்தவர்கள். இதனால் இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இடம்பிடித்தால், நடிகர்கள் மீதான அபிமானத்தால் மக்கள் ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. ஓட்டுக்கள் பிரிந்தால் அது பிரதான கட்சிகளான அதிமுக, திமுக.,விற்கு நிச்சயம் நெருக்கடியை கொடுக்கலாம்.
உருவாகிறதா மூன்றாவது அணி
திரைதுறையை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணையும் பட்சத்தில் மூன்றாவது அணி அமையவும் வாய்ப்புள்ளது. ஆனால் கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் ஏற்கனவே தனித்து பிரசாரத்தை துவக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.