ஜெ. காட்டிய வழியிலிருந்து விலகி.. 'அந்த' தவறு செய்ய போகுதா அதிமுக.. பீதியில் தொண்டர்கள்
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக திரும்பவும் அதே தவறை செய்ய போகிறதா என்று தொண்டர்கள் கதி கலங்கி உள்ளனர்.
ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக. இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
போன தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, போன்ற நடவடிக்கைகளால் மக்களிடையே அளவுக்கு அதிகமான கெட்ட பெயரை சம்பாதித்து விட்டது.
வளர்ச்சி திட்டங்கள்
4 வருடத்திற்கு முன்பு இருந்த பெயர் இப்போது பாஜகவுக்கும் இல்லை, மோடிக்கும் இல்லை. திரும்பவும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் கதி என்ன ஆகும்? பாஜகவுக்கு எப்படி தேசிய அளவில் பெயர் கெட்டு போய்உள்ளதோ, அப்படித்தான் மாநில அளவில் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ளது.
அனுபவ அறிவு
இதற்கு முக்கிய காரணம், ஸ்திரத்தன்மையுள்ள காரியங்களோ, மாநில வளர்ச்சி திட்டங்களோ 2 ஆண்டுகளாக தமிழகத்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கிடைக்கவில்லை. இது போதாதென்று அனுபவமும், பக்குவமும், முதிர்ச்சியும் அற்ற சில அமைச்சர்களின் பேட்டிகள், சர்ச்சை பேச்சுகள் மக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்கி விட்டது.
கண்ணோட்டம்
மற்றொரு பக்கம் பகிரங்கமாக ஊழல் புரிந்த அமைச்சர், அதிகாரிகள் என்று தெரிந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அரவணைத்து செல்லுகிறது அதிமுக தலைமை. இப்படி மொத்தத்தில் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக என்ற பிரமாண்டத்தை பார்த்த கண்ணோட்டம் மாறியே விட்டது.
ரெய்டுகள்
ஆட்சிக்கு வந்த 2 வருடத்திலேயே இவ்வளவு கறைகள் உள்ளன, என்றால் மீதமுள்ள வருடங்களிலாவது படிந்த கறைகளை அகற்ற நடவடிக்கை அவசியம். பாஜகவிடம் தன் தலையை தானாக கொடுக்க அதிமுக துணிய கூடாது. எப்போதுமே தன் கைப்பிடிக்குள் வைத்து கொண்டு, அவர்களை ஆட்டுவிப்பதுதான் பாஜகவின் அடிப்படை குணமே. இதை 2 வருடங்களில் சிபிஐ ரெய்டு, திகார் சிறை என எல்லாவற்றையும் பார்த்தும், திரும்பவும் அக்கட்சியிடமே சரணாகதி ஆவது கட்சிக்கு மட்டுமல்ல, மாநிலத்துக்கே நல்லதல்ல.
தடித்த வார்த்தைகள்
ஆரம்பத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை ஏற்று கொண்டபோதுகூட மக்களுக்கு இவ்வளவு கோபம் இல்லை. நம் மாநிலத்தின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததால்தான், ஆளும் தரப்பு மீது மக்களுக்கு ஆத்திரம் அதிகரிக்க செய்தது. பாஜகவின் கைப்பாவை என்ற தடித்த வார்த்தைகளை சிறிய கட்சிகள்கூட விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டுவந்தது.
அதிருப்தி
அதனால் திரும்பவும் பாஜகவுடனே கூட்டணி என்றால், ஆளும் கட்சி மேல் அதிருப்தியும், பாஜக மேல் உள்ள அதிருப்தியும் ஒன்றாக சேர்ந்து கடைசியில் அதிமுக என்ற பாரம்பரிய கட்சிக்கு வேட்டு வைத்து விடுவார்கள் போல இருக்கே என்று அதிமுக தொண்டர்கள் கலங்கி கூறுகிறார்கள்.
உசிதமானது
எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த அதிமுகவை இனி வரும் காலங்களில் காப்பாற்றவும், இப்போதுள்ள கறைகளை போக்கவும் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை அதிமுக எடுக்காமல் இருப்பதே உசிதமானது!!