கு.க.செல்வம் ஏன் இப்படிச் சொல்கிறார்.. உதயநிதியால் திமுகவில் மூத்தவர்களுக்கு பிரச்சினையா??
சென்னை: திமுகவில் இளைஞர்களைத் தவிர வேறு யாருக்குமே மரியாதை இல்லை, உரிய இடம் இல்லை என்பது போல இருக்கிறது பாஜகவுக்குத் தாவிப் போன கு.க. செல்வம் சொல்வதை பார்த்தால்.
அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் கட்சி தாவலுக்கு சொல்லப்படும் முக்கியமான காரணம் கட்சியில் மரியாதை இல்லை. மூத்தவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். பல பத்தாண்டுகளாக கட்சியில் இருக்கும் ஒருவர் திடீரென ஓரங்கட்டப்பட்டுவிடுவது வாடிக்கையான ஒன்றாகும்.
அந்த வகையில் தமிழகத்தில் திமுகவில் தற்போது பிரச்சினை வெடித்துள்ளது. திமுகவில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் கு. க. செல்வம். அவர் தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தார்.
கொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
தலைமையிடம்
இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ அன்பழகன் மரணமடைந்த நிலையில் அவருடைய பதவியை தனக்கு வழங்குமாறு கு க செல்வம் திமுக தலைமையிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் திமுகவோ கு க செல்வத்திற்கு பதவியை கொடுக்காமல் சிற்றரசு என்பவருக்கு பதவி கொடுத்துவிட்டது.
இளைஞரணி செயலாளர்
இதனால் கு. க. செல்வம் அதிருப்தி அடைந்து இதற்கெல்லாம் காரணம் உதயநிதி ஸ்டாலின் என்பதை போல் பேட்டி கொடுத்துள்ளார். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் அண்மையில் கூட கு.க.செல்வம் நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது. முதலில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த உதயநிதியை திமுக சீனியர்கள் சிலர் தான் முழுமையாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறும், இளைஞர்கள் அப்போது தான் உற்சாகமடைவார்கள் எனவும் கூறி அரசியலுக்கு அழைத்து வந்தனர்.
மூத்த தலைவர்கள்
இதற்காக ஏற்கெனவே அப்பதவியிலிருந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதனை நீக்கிவிட்டு அவருக்கு வேறு பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த பதவியில் உதயநிதி அமர வைக்கப்பட்டார். இதனால் மூத்த தலைவர்கள் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்ததாகவே கூறப்பட்டது. அது போல் எம்பி தேர்தல், எம்எல்ஏ இடைத்தேர்தல்களிலும் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதிலும் உதயநிதியின் தலையீடு இருந்ததாக சொல்லப்பட்டது.
கட்சி பதவி
அது போல் மூத்த தலைவர்கள் இருக்க கட்சி பதவி பெறுவதற்கு முன்னரே, உதயநிதியின் புகைப்படங்கள் பேனரில் இடம்பெற்றது மற்ற நிர்வாகிகளை முகம் சுளிக்க வைத்தது. இதுகுறித்து உதயநிதியிடமே ட்விட்டரில் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு உதயநிதி இனி அப்படி நடக்காது என வாக்குறுதி கொடுத்தார்.
பாஜகவில் இணையவில்லை
அதன் பின்னர் இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் உதயநிதி பேச்சுதான் எடுபடுகிறது என்றும் 55 வயதான திமுகவினர் பாஜகவில் இணையுங்கள் என கு க செல்வம் பிரசாரம் செய்து வருகிறார். எனினும் செல்வம் இதுவரை பாஜகவில் இணையவில்லை. ஒருவேளை செல்வம் பாஜகவில் இணைந்து வரும் தேர்தலில் திமுகவின் உதயநிதிக்கு எதிராக களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.