வக்பு வாரியம் கலைப்பும்.... நிர்வாக குளறுபடியும்...!
சென்னை: வக்பு வாரியம் கலைக்கப்பட்டது முதல் அதன் நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்கள் சொத்தில் சில பங்கை சமுதாய மக்களுக்காகவும், பள்ளிவாசல்களின் வருமானத்துக்காகவும், தானமாக வழங்குவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும். அப்படி வழங்கப்படும் சொத்துக்களை கண்காணித்து நிதி நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல், தர்ஹாக்களில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.
இந்நிலையில் தமிழக வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதால் அதன் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாகவும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் சில ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கு செல்வதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனை தடுக்க மீண்டும் வக்பு வாரியத்திற்கு தலைவர், உறுப்பினர்கள் என அனைவரையும் நியமித்து அதனை செயல்பட வைக்க வேண்டும் என, அபுபக்கர் எம்.எல்.ஏ, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, போன்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், வக்பு வாரியத்தை மீண்டும் கட்டமைக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என்பது அதன் நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தீக்கை வக்பு வாரிய நிர்வாக அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்த நிலையில், அதற்கு நீதிமன்றம் மூலம் தடை பெற்றார் வழக்கறிஞர் அஜ்மல் கான். இப்படி குழப்பங்கள் சூழந்த வாரியமாக வக்பு வாரியம் மாறிவிட்டது. இதனா பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் எழுந்துள்ள நிர்வாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாத நிலை உருவாகியுள்ளது.
அதிமுக எம்.பி.யாக உள்ள முன்னாள் அமைச்சர் முகமது ஜானை தலைவராக கொண்டு வக்பு வாரியம் செயல்பட்டால் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தடையின்றி வக்பு வாரியம் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம் எனவும் தெரிவிக்கிறார் மனித நேய ஜனநாய கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.