என்னாது.. விண்வெளியை ராணுவமயமாக்குதா இந்தியா? போட்டு உடைக்கும் இஸ்ரோ சிவன்!
சென்னை: 'மாடு மேய்க்கும் நாட்டுக்கு விண்வெளி ஆராய்ச்சி எதுக்கு?' இந்தியா முதன் முதலில் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கியபோது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வழக்கம்போல் நம்மைப் பார்த்து சிந்திய சர்வாதிகார நக்கல் வார்த்தைகள் இவை. ஆனால் இன்று அவையே 'சர்வதேசத்தையும் மிரட்டிட இந்த இந்தியா விண்வெளியை ஓவராய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது!' என்பதுதான்.
அந்தளவுக்கு வான்வெளியை மிக லாவகமாக பயன்படுத்த துவங்கியுள்ளது இந்தியா. அதுவும் ஸ்பேஸ் ரிசர்ச்சிலும், திட்ட செயலாக்கத்திலும் மிகப்பெரிய முன்னோடியாக வந்து நிற்கிறது வல்லரசு நாடுகளை விட.
இந்த தேசத்தில் இன்னும் சில கோடி மக்கள் சோத்துக்கு வழியில்லாமல் கும்பி காய்ந்து கிடக்க, சாட்டிலைட்டில் சாதித்து என்ன செய்யப்போகிறோம்! விண்வெளியில் முதலீடு செய்வது என்பது மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமா? அல்லது இந்திய அரசு தன்னை சர்வதேச தளத்தில் பிரம்மாண்டமாய் காட்டிக் கொள்ள உதவும் வெற்று நாடகமா? என்று இஸ்ரோவின் தலைவர் சிவனிடம் கேட்கப்பட்டதும், அவர் அளித்த பதில்கள் இதோ...
"இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும், இந்திய அரசு விண்வெளியில் செய்யும் முதலீடுகளும் மக்களுக்கு நன்மை விளைவிப்பதை நோக்கி மட்டுமேதான் இருக்கும். மக்களுக்குப் பயன்படும் ஆராய்ச்சிகளை மட்டும்தான் இஸ்ரோ எடுத்து நடத்தும். இந்த பூமியில் எரிபொருள், தண்ணீர், கனிம வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது, அதை ஈடுகட்டுவதற்கு மற்ற கிரகங்களில் உள்ள வளங்களைப் பற்றி இப்போதே ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொள்வது நல்லதாகவும், வசதியாகவும் இருக்கும்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கும் இதுவே காரணம். சாதகமான முடிவுகள் கிடைத்து, தேவையும் ஏற்பட்டால் இஸ்ரோ எதிர்காலத்தில் நிலவில் மனிதனை குடியேற்றவும் செய்யும். அதேபோல் விண்வெளியை இந்தியா ராணுவமயமாக்கி வருகிறது, சர்வதேசத்தை மிரட்டவே இதை பயன்படுத்துகிறது என்பதும் அடிப்படையற்ற வதந்தி. மற்ற நாடுகளில் வேண்டுமானால் விண்வெளி ஆராய்ச்சியை ராணுவத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை. இஸ்ரோவை பொறுத்தவரையில் இந்திய நாட்டு மக்களுக்கு விண்வெளி மூலம் நன்மை செய்வதே அடிப்படை நோக்கம். ராணுவ செயல்பாட்டுக்கும், இஸ்ரோ ஆராய்ச்சிகளுக்கும் எந்த தொடர்புமில்லை.
இஸ்ரோ ஒவ்வொரு முறையும் தனது புதிய ப்ராஜெக்டின் புளு பிரிண்டை திருப்பதியில் பெருமாள் பாதத்தில் வைத்து வேண்டுவதில் எந்த சர்ச்சையும் இல்லை. விண்வெளி ஆராய்ச்சியில் எவ்வளவுதான் பக்காவாக பிளான் பண்ணினாலும் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்து, குழப்பமேற்பட வாய்ப்பு இருக்கிறது. பல கோடி முதலீடில் செயல்படுத்தப்படும் திட்டம் தோல்வியடைய யாரும் விரும்புவதில்லை.
எனவே கடவுள் சக்தி மீது நம்பிக்கை வைத்து வணங்குவதில் எந்த தவறுமில்லை. இதே போல் இஸ்ரோ கிறிஸ்தவர்கள் சர்ச்சிலும், இஸ்லாமியர்கள் மசூதியிலும் பிரார்த்தனை செய்வது வழக்கம்தான் இதில் சர்ச்சை ஒன்றுமே இல்லை." என்கிறார்.
எதிர்காலத்துல வானத்துல இருந்து டியூப் போட்டு தண்ணீரை உறிஞ்சுவோம்னு சொல்லுங்க!
ஜி.தாமிரா