11 வயதில் இவ்வளவு திறமைகளா...? தமிழக மாணவனை கண்டு இஸ்ரோ வியப்பு
சென்னை: சென்னையை சேர்ந்த 11 வயது சிறுவன் பிரதீக், தனது அபார மதிநுட்பத்தால் அசரவைக்கும் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து இஸ்ரோவிடம் இருந்து மூன்று பரிசுகள் பெற்றுள்ளதால் அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Recommended Video
மேலும், தேசிய அளவில் நடைபெறும் கணிணிதுறை சார்ந்த எந்த ஒரு போட்டிகளானாலும் சரி அதில் பங்கேற்று பரிசுகளை வென்றுவருகிறான்.
இஸ்ரோவில் இணைந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதையே தனது எதிர்கால லட்சியமாக கொண்டுள்ளான் சிறுவன் பிரதீக்.
கண்டுபிடிப்புகள்
சென்னை பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் -காயத்ரி தம்பதியின் மகன் பிரதீக், அதே பகுதியில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்குள் இருந்த அறிவியல் வேட்கையை அறிந்த அவனது பெற்றோர் அதற்கு தடையாக இல்லாமல் மகனின் விருப்பத்திற்கேற்ப பாதை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், ஆராய்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் சிறுவன் பிரதிக் கேட்கும் அனைத்து பொருட்களையும் சலிப்பின்றி வாங்கிக்கொடுத்தும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பிரதிக் மேற்கொள்ளும் புதிய புதிய முயற்சிகளுக்கு அவன் படிக்கும் பள்ளிநிர்வாகமும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
சிறப்பு சலுகை
ஒரே கம்ப்யூட்டரில் 13 ஓ.எஸ். மென்பொருளை நிறுவி தடையின்றி இயங்கக்கூடிய வகையில் மல்ட்டி பூட்டிங் டிவஸை வடிவமைத்துள்ளான் இந்த சிறுவன் பிரதீக். மெத்தப்படித்த மேதாவிகளும், பொறியியல் வல்லுநர்களும் பிரதீக்கின் கண்டுபிடிப்பை அறிந்து மெய் சிலிர்த்து பாராட்டி வருகின்றனர். இன்னும் தனது கண்டுபிடிப்புக்கான உரிமத்தை பிரதீக் பெறவில்லை. அதற்கான முயற்சிகளில் பிரதீக் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி வாட்ஸ் அப், மெசேஞ்சர் போன்ற செயலிகளுக்கு சவால் விடும் வகையில் சாலட் மெசேஞ்சர்(SALAD MESSENGER) என்ற செயலியை சொந்தமாக உருவாக்கியுள்ளான்.
வாழ்த்து
நாமக்கல், திருச்செங்கோடு, என தமிழகத்தின் பல பகுதிகளில் வெறுமனே மதிப்பெண்களை மட்டுமே இலக்காக கொண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறுவன் பிரதீக்கை போன்று தனித்திறமைகளுடன் ஒவ்வொரு மாணவனும் திகழவேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார் ஆசிரியை பொற்செல்வி. மேலும், தன்னிடம் பயிலும் மாணவன் பிரதீக் எதிர்காலத்தில் சுந்தர்பிச்சையை போல் கூகுள் போன்ற உயர் நிறுவனத்தில் பணிக்கு சேர வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பொற்செல்வி.
கல்விக்கட்டணம்
சிறுவன் பிரதீக்கின் திறமையை அறிந்த கே.ஆர். எம். பள்ளி தாளாளர் தாயுமானசுவாமி, அவனுக்கு கல்வி கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளார். மேலும், பள்ளியில் உள்ள ரோபோட்டிக் ஆய்வகம், கணிணித்துறை ஆய்வகங்களில் பிரதீக்கின் புதிய முயற்சிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பள்ளி நிர்வாகம் பிரத்யேகமாக வாங்கிக்கொடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான அறிவியல் துறை சார்ந்த போட்டிகளில் பிரதீக் கலந்துகொள்ளும் வகையில் அவனை அந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான முன்னெடுப்புகளையும் கே.ஆர். எம். பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பாராட்டு
மேலும், போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அடிக்கடி கேரளா, பெங்களூர், டெல்லி என வெளி மாநிலங்களுக்கு பிரதீக் செல்ல வேண்டியுள்ளதால் அவனுக்கு (ON DUTY) கொடுத்து விடுப்பில் பாதிப்பு இல்லாதவகையில் பார்த்துக்கொள்கிறது. இதனிடையே ''ஸ்பேஸ் வீக்'' என்ற பெயரில் இஸ்ரோ நடத்திய போட்டியில் பங்கேற்ற சிறுவன் பிரதீக் 3 பரிசுகளை வென்று, இஸ்ரோ இயக்குநர் சிவனுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளான்.
நாளை (வியாழக்கிழமை) தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படும் இந்த நாளில், சிறுவன் பிரதீக்கின் திறமையை உணர்ந்து, அவனது கண்டுபிடிப்புகளுக்கு அரசு தரப்பில் இருந்து அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.