31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்.. இஸ்ரோ அபாரம்
Recommended Video
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (அதாவது இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 43 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்துள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை துவங்கியது. இன்று காலை 9.58 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த அதி நவீன பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட் மூலம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, கேட்டலோனியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அவற்றுடன் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளும் பயணிக்கிறது.
ஹைசிஸ் செயற்கைக்கோள், முழுக்க, முழுக்க புவி வெளிப்பரப்பை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. மிக துல்லியமான கேமராக்களை கொண்டு பூமியை கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும். நிலப்பகுதி, வானிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஹைசிஸ் துல்லியமாக கண்காணிக்கும்.
ஹைசிஸ் செயற்கைக்கோள் மூலமாக, வனப்பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பதால், காட்டுத் தீ, செம்மர கடத்தல், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். சுமார் 380 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.
புவி வட்டப் பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவில் அதனை நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிற 30 செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவி, இஸ்ரோ உலக சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.