சசிகலா பினாமி மூலம் ரூ 168 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது உண்மை.. வருமான வரித் துறை
சென்னை: பண மதிப்பிழப்பின்போது சசிகலா பினாமி பெயரில் ரூ 168 கோடிக்கு சொத்து வாங்கியது உண்மை என வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, அதாவது பண மதிப்பிழப்பின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு அந்த பணத்தை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் 1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
இது கடந்த 2017ஆம் ஆண்டு அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
சொத்துகள் விற்பனை
சென்னை, கோவை, காஞ்சிபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் ரூ.1,674 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது.
விழுப்புரம்
இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சொத்துகளை முடக்குவதற்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்த சொத்துகள் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா வாங்கிய சொத்துகளில் புதுவை அருகே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டலும் ஒன்று.
பிரபல நகைக் கடை
இந்த ஓட்டல் புதுவையைச் சேர்ந்த பிரபல நகைக் கடையான லட்சுமி ஜுவல்லரிக்கு சொந்தமானதாகும். இந்த ஓட்டலை சசிகலா ரூ 168 கோடிக்கு வாங்கினார். அதற்காக அவர் ரூ 148 கோடி செல்லாத நோட்டை வழங்கினார். இந்த ஓட்டலையும் பினாமி சொத்துகள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்ய வருமான வரித் துறை ஓசியன் ஸ்பிரே நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஒப்பந்தம் இல்லை
இந்த நோட்டீஸை எதிர்த்து அந்த ஓட்டலின் இயக்குநர் மற்றும் பங்குதாரர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் கூறுகையில் இதை பினாமி சொத்து அடிப்படையில் பறிமுதல் செய்யமுடியாது. நாங்கள் சசிகலாவிடம் அந்த ஓட்டலை விற்க ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அதை நிறைவேற்றவில்லை.
வருமான வரித் துறை
ரூ 168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சசிகலாவின் பிரதிநிதிகள் 2 பேர் எங்களிடம் விலை பேசினர். அதில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை கொடுத்து இதை மாற்ற முடியாவிட்டால் திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என கூறி ரூ 135 கோடியை கொடுத்தனர். ஆனால் அதில் 37 கோடியை எங்களால் மாற்றமுடியவில்லை. இந்த விவரங்களை வருமான வரித் துறை விசாரணையின் போது கூறினோம்.
பணம்
எனவே நாங்கள் சசிகலாவின் பினாமிகள் என அறிவித்து எங்கள் சொத்துகளை முடக்க வருமான வரித் துறை வழங்கிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரினர். அப்போது வருமான வரித் துறை பதிலளிக்கையில் ரூ 168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதற்கு சசிகலா தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் தனது பங்குகளை சசிகலா தரப்புக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இதற்கான பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டு விட்டார்கள்.
உறுதி
எனவே, ஓட்டல் விற்பனை என்பது முடிந்து விட்டது. இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சோதனை நடத்திய போது, கண்டுபிடித்து இருக்கிறோம். நடந்த ஒப்பந்தங்களை மறைத்து ஓட்டல் பங்குதாரர்கள், அதாவது மனுதாரர்கள் தவறான தகவல்களை தருவதற்கு முயற்சிக்கிறார்கள். இது, பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம் என்பது உறுதியாகி உள்ளது என வருமான வரித் துறை அறிவித்தது.