ஆருத்ரா மோசடி.. 26 இடங்களில் 12 மணி நேரமாக நடந்த அதிரடி ரெய்டு.. 3.41 கோடி பணம், தங்கம் பறிமுதல்!
சென்னை: ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டிற்கு மாதந்தோறும் 36 ஆயிரம் ரூபாய் வட்டி என விளம்பரம் செய்ததாக சொல்லப்படும் நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 12 கிளைகள் உள்ளன.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிளையில் இந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு விளம்பரம் வெளியானது.
1 லட்ச ரூபாய் முதலீடு
அதில் எங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டிற்கு மாதம் 36 ஆயிரம் வட்டி தருவோம். ஒரு லட்சம் என்றில்லை முதலீட்டாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது போல் 1 லட்சம் ரூபாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்கப்படும் என சென்னையில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
விளம்பரம்
இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை முதலீடு செய்தனர். இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கிளையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவினர் காலை 7 மணி முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் வில்லிவாக்கம், ஆவடியில் உள்ள கிளைகள், இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ராஜசேகர் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முதலீடுகள்
ஆருத்ரா நிறுவனத்தில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, எவ்வாறு முதலீடுகள் பெறப்படுகின்றன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், வேலூர் மாவட்டம் காட்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் உள்ளிட்ட கிளைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.
போட்டியாளர்கள் செய்த விளம்பரம்
இதனால் முதலீடு செய்தவர்கள் பரிதவித்து வரும் நிலையில் எங்கள் நிறுவனத்தில் இது போன்றதொரு விளம்பரத்தை நாங்கள் கொடுக்கவில்லை என வழக்கறிஞர் நரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த விளம்பரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. இதை எங்கள் போட்டியாளர்கள் யாரோ போலியாக விளம்பரம் கொடுத்து எங்கள் நற்பெயரை கெடுக்க விளம்பரம் கொடுத்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் ஏமாறவில்லை
எங்கள் நிறுவனத்தில் தங்கம் சிறுசேமிப்பு திட்டம், ரியல் எஸ்டேட் திட்டம், ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆகிய திட்டங்களை நடத்தி வருகிறோம். இவற்றிற்கு முறையாக அரசிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் காவல் துறையிடம் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தவர்கள் யாரும் ஏமாறவில்லை என்றார்.
பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் 12 மணி நேரமாக நடத்திய சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48 கணினி ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2 பேர் கைது
மேலும், இந்த அதிரடி சோதனை மூலம் ஆருத்ரா நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ரா நிறுவன இயக்குனர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில மாதங்களிலேயே மக்களிடம் பல கோடி முதலீடு பெற்ற இந்த நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.