குஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன?
சென்னை: நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் சேர உள்ளதாக நீண்ட நாளாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று பாஜக தவைர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதனிடையே அண்மையில், குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி பா.ஜ.க தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி பிரபல தமிழ் தொலைக்காட்சி ஊடகம், பாஜக மாநில துணை தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியது.
நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்
பாஜக தொண்டனாக நான்
இதற்கு அவர் பதில் அளிக்கையில், நான் பாஜகவில் இணைந்த பிறகு ஒரு தொண்டனாக பிரதமர் மோடியை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று களப்பணியாற்றிக்கொண்டு வருகிறேன். கொங்கு மண்டலத்தில் கூடுதலாக பிரதமரின் திட்டங்களை கொண்டு சேர்த்து வருகிறேன் என்பதால், இப்போது அங்குதான் இருக்கிறேன்.
வரவேற்கும் அண்ணாமலை
அதனால், குஷ்பு இணைவது குறித்து தெரியாது. குஷ்பு பாஜகவில் சேர்வதை வரவேற்கிறேன். அது, பாஜக மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி. அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பவை. அரசியலில் பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் மிகவும் முக்கியம். அது அவரிடம் நிறையவே உள்ளது.
பாஜகவில் குஷ்பு
அதேபோல, எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்லப் புரிதலோடு தெளிவாகப் பேசக்கூடியவர். அவர் எங்கள் கட்சிக்கு வந்தால் பிரதமர் மோடியின் சாதனைகளையும் பாஜக மக்களுக்கான அரசு என்பதையும் எடுத்துச் சொல்வார். குஷ்பு பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும்.
பிரதமர் மோடியை புரிந்து கொள்வார்கள்
பாஜக கொண்டுவந்த புதியக் கல்விக் கொள்கையை குஷ்பு ஆதரித்தது பற்றி கேட்கிறீர்கள். ஒரு காலத்தில் குஷ்பு பாஜகவின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர். இப்போது, அவரே எங்கள் கட்சியின் திட்டங்களை பாராட்டுகிறார் என்கிற போது தமிழக மக்களும் நிச்சயம் பிரதமர் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். ஒரு தாயாக, ஒரு பெண்மணியாக, ஒரு தமிழக அரசியல்வாதியாக புதியக் கல்விக்கொள்கை தொலைநோக்கு சிந்தனை கொண்டது என்று அவருக்கு தெரிந்திருக்கவேதான் பாராட்டியிருக்கிறார்.. கட்சி பாகுபாடில்லாமல், கட்சிக் கொள்கையை மீறி குஷ்பு வரவேற்றது, அவரது வெளிப்படைத்தன்மையையும் உண்மையான உள்ளத்தையுமே காட்டுகிறது" என்றார்.
காங்கிரஸில் வருத்தம்
இதனிடையே குஷ்பு வெளிப்படையாக இதுவரை பாஜகவில் சேரப்போவது குறித்து இதுவரை அறிவித்தது இல்லை. காங்கிரஸ் கட்சியின் கருத்து மோதல்கள் அவ்வப்போது அவருக்கு ஏற்பட்டது. அண்மையில் வசந்த குமார் எம்பிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். அதன்பிறகு பெரிய அளவில் எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் தான் குஷ்பு பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதை உண்மையா இல்லையா என்பதை குஷ்பு அறிவித்தால் மட்டுமே தெரியவரும்.