பாஜக போராட்டத்திற்கு தடைவித்து குஷ்புவை கைது செய்தது சட்ட விரோதம் - எல். முருகன்
பாஜக மகளிரணி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று மாநிலத் தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
சென்னை: குஷ்பு கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். பாஜக மகளிரணி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருமாவளவனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில், பாஜக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தது. காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு காரில் சென்றார்.
அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்தனர். குஷ்பு கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினரிடையே கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், குஷ்பு கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்தார். பாஜக மகளிரணி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எல். முருகன், பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவன், அவருக்கு ஆதரவு தரும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை தமிழக தாய்மார்கள் நடமாட விட மாட்டார்கள் என்று தான் கூறினேன் என்றும் விளக்கம் அளித்தார்.
திமுகவில் உள்ள தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசினால் யாராவது பார்த்துக்கொண்டிருப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார் எல். முருகன்.