யாருக்கும் ஆதரவு கிடையாது.. ரஜினியின் தேர்தல் நிலைப்பாடு.. தமிழிசை ரியாக்சன் என்ன தெரியுமா?
ரஜினியின் லோக்சபா நிலைப்பாடு பாஜகவிற்கு எதிரானது கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினியின் லோக்சபா நிலைப்பாடு பாஜகவிற்கு எதிரானது கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்றும் கூட அவர் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் பலரும் கருதினார்கள். ஆனால் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று தற்போது ரஜினி உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.
தற்போது ரஜினியின் நிலைப்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், ரஜினியின் அறிவிப்பு பாஜகவிற்கு எதிரானது கிடையாது. யார் என்ன சொன்னாலும் அதை பாஜகவிற்கு எதிராக பார்க்க கூடாது. இது அவரது சொந்த முடிவு.
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெரிந்ததுதான். இது எதிர்பார்த்த முடிவுதான். இந்த முடிவை நான் நேர்மறையாக பார்க்கிறேன்.
இதை ஏன் பாஜகவிற்கு எதிரான கருத்து என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை மற்றவர்களுக்கு எதிரான கருத்து என்று பார்க்க கூடாதா?
இப்போது மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி நடந்து வருகிறது. அது தேர்தலுக்கு பின்பும் தொடரும். நாங்கள் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். நாங்கள் தமிழகத்தின் பிரச்னையை தேர்தலுக்கு பின் தீர்த்து வைப்போம். தண்ணீர் பிரச்சனையை தமிழகத்தில் சரி செய்வோம், என்று தமிழிசை கூறியுள்ளார்.