பாஜக கூறும் நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.. கே.எஸ். அழகிரி கருத்து
சென்னை: பணத்தை அள்ளி வீசி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ். அழகிரி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனியில் வாக்காளர்களுக்கு அதிகப் பணம் வழங்கி வருவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றார்.
பாஜக தேர்தல் அறிக்கையில், நதிகள் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளதற்கு, நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, பல மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமில்லை என்று கே .எஸ். அழகிரி பதில் அளித்தார்.
சீமானும், "சிவப்பு துண்டுக்காரரும்".. முழக்க பேச்சை முடியும் வரை கேட்டு கை குலுக்கிய செல்வராசு!
மேலும், ஜிஎஸ்டி முரண்பாடு சரி செய்யப்படும் என மோடி இப்போது சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார். பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களை முறையாக திட்டமிடாமல் அறிவித்தது பாஜக அரசு என்றும் அவர் குற்றம் சாட்டினார்
முன்னதாக, பா.ஜ.க-வினர் ஒருபோதும் ராமர்கோயில் கட்டமாட்டார்கள், கட்டினால் பா.ஜ.க. முடிந்துவிடும் என்றும், நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.